இலங்கை மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான வான்வழித் தொடர்புகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், சீனாவின் பெய்ஜிங் கெபிடல் எயார்லைன்ஸ் (Beijing Capital Airlines) நிறுவனம் தனது நேரடி விமானச் சேவையை இன்று (31) அதிகாரபூர்வமாகத் தொடங்கியது.
பெய்ஜிங்கின் டெக்ஸிங் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட A-330 எயார்பஸ் ரக விமானம் (விமான இலக்கம்: JD-487), இன்று பிற்பகல் 01.46 மணியளவில் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தைச் சென்றடைந்தது.
கன்னிப் பயணமாக வந்தடைந்த இந்த விமானத்திற்கு விமான நிலைய அதிகாரிகள் பாரம்பரிய முறைப்படி நீர்த்தாரை (Water Salute) மரியாதை வழங்கி உற்சாக வரவேற்பளித்தனர்.இந்த முதல் விமானத்தில் 170 பயணிகள் மற்றும் 13 ஊழியர்கள் இலங்கைக்கு வருகை தந்தனர்.
இந்த விமானச் சேவையானது வாரத்திற்கு இருமுறை (செவ்வாய் மற்றும் சனிக்கிழமை) தலா 8 மணித்தியாலப் பயணக் காலத்துடன் இயங்கும்:
கட்டுநாயக்க வருகை: பி.ப. 02.20 மணி
மீளப் புறப்படும் நேரம்: பி.ப. 04.20 மணி
இந்த புதிய விமானச் சேவையின் மூலம் சீனச் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பதோடு, இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவுகளும் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

