இலங்கையில் புகையிலை மற்றும் மதுபானப் பயன்பாடு காரணமாக ஆண்டுதோறும் சுமார் 22,000 பேர் உயிரிழப்பதாகப் புகையிலை மற்றும் மதுபானம் மீதான தேசிய அதிகார சபை அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் நிஹால் அபேசிங்க தலைமையில் அண்மையில் நடைபெற்ற துறைசார் மேற்பார்வைக் குழு கூட்டத்தில் அதிகாரிகள் தெரிவித்த முக்கிய தரவுகள்:
புகையிலை மற்றும் மதுபானப் பாவனையினால் ஏற்படும் நோய்களுக்கான சிகிச்சைக்காக அரசு ஆண்டுதோறும் 225 – 240 பில்லியன் ரூபாய்களைச் செலவிடுகிறது. நேரடி மற்றும் மறைமுகப் பாதிப்புகளால் சுமார் 22,000 இலங்கையர்கள் ஒவ்வொரு ஆண்டும் உயிரிழக்கின்றனர்.
இந்தத் தீய பழக்கங்களிலிருந்து பொதுமக்களைப் பாதுகாப்பதற்காகப் புகையிலை மற்றும் மதுபானம் மீதான தேசிய அதிகார சபை சட்டத்தில் (NATA Act) பாரிய மாற்றங்களைச் செய்ய அதிகாரிகள் பரிந்துரைத்துள்ளனர்.
உலகில் 104 நாடுகள் சிகரெட்டுகளைத் தனித்தனியாக (Single Sticks) விற்பனை செய்வதைத் தடை செய்துள்ளன. அதே நடைமுறையை இலங்கையிலும் கொண்டு வர வலியுறுத்தப்பட்டுள்ளது.
தனித்தனியாக விற்கப்படும்போது, சிகரெட் பக்கெட்டுகளில் உள்ள சுகாதார எச்சரிக்கைப் படங்கள் நுகர்வோரின் கண்களுக்குத் தெரிவதில்லை.சிகரெட்டுகளின் விலையை முதலில் தீர்மானித்த பின்னரே அதற்கான வரிகளை விதிக்க வேண்டும் எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சுகாதாரம், ஊடகங்கள் மற்றும் மகளிர் வலுவூட்டல் தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர், இந்தச் சட்டத் திருத்தங்களுக்குத் தேவையான முழுமையான ஒத்துழைப்பை வழங்கத் தயாராக இருப்பதாக உறுதியளித்துள்ளார்.
இந்தச் சட்டத் திருத்தங்கள் அமுலுக்கு வரும் பட்சத்தில், இளைஞர்கள் மற்றும் குறைந்த வருமானம் பெறுவோர் மத்தியில் சிகரெட் பயன்பாடு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.