இலங்கையில் பலகட்சி ஆட்சி முறையை அழித்து, ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல் விடுக்க அரசாங்கம் நடவடிக்கைகள் எடுத்து வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்க கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார். தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பாக எதிர்க்கட்சிகள் இணைந்து நேற்றுமுன்தினம் நடத்திய கூட்டுக் கலந்துரையாடலிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
“நாட்டில் ஜனநாயகத் தத்துவங்களுக்கு ஒவ்வொரு நாளும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ள ரணில், வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் மகா சங்கத்தினர் அவமதிக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார். அத்துடன், போலியான குற்றச்சாட்டுகள் மூலம் எதிர்க்கட்சிகளை அடக்கி ஒடுக்கும் செயற்பாடுகள் இடம்பெறுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
“பலகட்சி ஆட்சிமுறைக்கு இலங்கையில் ஆபத்து ஏற்பட்டுள்ளது. ஜனநாயகத்தை நிலைநிறுத்த நாம் கடுமையாகப் போராட வேண்டும்” என வலியுறுத்திய அவர், இத்தகைய ஜனநாயக விரோதச் செயற்பாடுகளைத் தீர்க்கமாக எதிர்க்க வேண்டும் என்றார். மேலும், நாட்டின் உறுதித்தன்மையைப் பாதுகாக்கவும், தேசிய பாதுகாப்பை மேம்படுத்தவும் எதிர்க்கட்சிகள் மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஐக்கிய தேசியக் கட்சி தனது ஆதரவை வழங்கும் என அவர் உறுதியளித்தார்.

