இந்தியாவும் சீனாவும் சிறந்த நண்பர்கள், பங்காளர்கள்: குடியரசு தின வாழ்த்தில் ஜி ஜின்பிங் நெகிழ்ச்சி!

chinas xi says india china are friends partners

இந்தியாவின் குடியரசு தினத்தை முன்னிட்டு, இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவுக்குச் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இதன்போது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு குறித்து அவர் ஆக்கபூர்வமான கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.

சீனாவின் அரசு செய்தி நிறுவனமான ‘சின்ஹுவா’ வெளியிட்டுள்ள செய்தியின்படி, ஜி ஜின்பிங் குறிப்பிட்டுள்ளதாவது சீனாவும் இந்தியாவும் வெறும் நண்பர்கள் மற்றும் பங்காளர்கள் மட்டுமல்ல, அவை மிகச்சிறந்த அண்டை நாடுகளுமாகும்.2025-ஆம் ஆண்டு முதல் இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகள் தொடர்ந்து மேம்பட்டு வருகின்றன. இது உலக அமைதி மற்றும் செழிப்பிற்கு மிகவும் அவசியமானது.

நல்ல அண்டை நாடுகளாகவும், நண்பர்களாகவும் இருப்பதுதான் இரு நாடுகளுக்கும் சரியான தெரிவு எனச் சீனா எப்போதும் நம்புகிறது.

கடந்த 2020-ஆம் ஆண்டு எல்லைப் பகுதியில் ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு இரு நாடுகளுக்கும் இடையே பெரும் விரிசல் ஏற்பட்டது. இருப்பினும் தொடர்ச்சியான உயர்மட்டப் பேச்சுவார்த்தைகள் மற்றும் சந்திப்புகள் மூலம் பதற்றம் தணிக்கப்பட்டது. கடந்த ஆண்டு முதல் இரு நாடுகளுக்கும் இடையே நேரடி விமான சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டமை உறவின் முன்னேற்றத்திற்கு முக்கியச் சான்றாக அமைந்தது.

இரு நாடுகளும் ஒருவருக்கொருவர் கவலைகளை நிவர்த்தி செய்து, ஆரோக்கியமான மற்றும் நிலையான உறவை நோக்கிப் பயணிக்க வேண்டும் எனச் சீன ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

மத்திய ஆசியப் பிராந்தியத்தில் இரு வல்லரசு நாடுகளும் இணக்கமாகச் செயல்படுவது உலகளாவிய புவிசார் அரசியலில் ஒரு முக்கிய மாற்றமாகக் கருதப்படுகிறது.

 

 

Exit mobile version