மருத்துவர்கள் உட்பட முழு அரச சேவைக்கும் 2026 ஆம் ஆண்டுக்கான அடிப்படை வேதன உயர்வை வழங்குவதற்காக அரசாங்கத்திற்கு மேலதிகமாக 220 பில்லியன் ரூபாய் செலவாகியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளார் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அத்துடன், 2027 ஆம் ஆண்டில் அரச பணியாளர்களுக்கான வேதனத்துக்காக 330 பில்லியன் ரூபாய் செலவாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போதே இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.
அரசாங்கம், இந்த மாதம் மருத்துவர்கள் உட்பட நாட்டின் அனைத்து அரச பணியாளர்களுக்கும் அடிப்படை வேதன உயர்வை வழங்கியுள்ளது.
அந்த அடிப்படை வேதன உயர்வுக்காக மாத்திரமே இந்த ஆண்டு 220 பில்லியன் ரூபாய் செலவாகின்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 2025 ஆம் ஆண்டில் 110 பில்லியன் ரூபாய் செலவானதுடன், இந்த ஆண்டு 220 பில்லியன் ரூபாய் செலவாகிறது.
2027 ஆம் ஆண்டில் 330 பில்லியன் ரூபாய் செலவாகும் என்பதுடன், இது இந்த வேதன உயர்வுக்காக மாத்திரமே செலவிடப்படவுள்ளதாகவும் அமைச்சரவை பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
அதிகரிக்கப்பட்ட அடிப்படை வேதனத்துக்கு ஏற்ப மேலதிக நேரக் கொடுப்பனவுகள், மேலதிக கொடுப்பனவுகள், விடுமுறை நாள் கொடுப்பனவுகள் அதிகரிக்கும்.
நாட்டின் பொருளாதார நிலைக்கு ஏற்ப இவற்றைச் செய்ய முடியும் என்றும் அமைச்சரவை பேச்சாளார் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

