அமெரிக்க அரசாங்கத்திற்கு நிதி ஒதுக்குவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் காரணமாக, அங்கு பகுதி அளவிலான அரசாங்க முடக்கம் (Government Shutdown) ஏற்பட்டுள்ளது. இதன் தாக்கம் இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் செயல்பாடுகளிலும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது.
தூதரகத்தின் உத்தியோகபூர்வ பேஸ்புக் (Facebook) மற்றும் ஏனைய சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் நாளாந்த தகவல்கள் தற்காலிகமாகக் குறைக்கப்பட்டுள்ளன.
தூதரகத்தின் முழுமையான பணிகள் மீண்டும் வழமைக்குத் திரும்பும் வரை, அவசரப் பாதுகாப்புத் தகவல்கள் (Safety and Security Information) மட்டுமே சமூக வலைத்தளங்களில் பதிவேற்றப்படும். ஏனைய வழக்கமான பதிவுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
அரசாங்க முடக்கம் ஏற்பட்ட போதிலும், இலங்கை உட்பட உலகெங்கிலும் உள்ள அமெரிக்கத் தூதரகங்களில் கடவுச்சீட்டு (Passport) மற்றும் விசா (Visa) சேவைகள் போதிய வளங்கள் உள்ளவரை தொடர்ந்து முன்னெடுக்கப்படும் எனத் தூதரகம் உறுதியளித்துள்ளது.
அமெரிக்க நாடாளுமன்றத்தில் வரவு செலவுத் திட்டத்திற்குத் தேவையான நிதி ஒதுக்கீடு அங்கீகரிக்கப்படாத நிலையில், அத்தியாவசியமற்ற அரச சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்படுவதையே இது குறிக்கும்.