இலங்கை அரசாங்கம் தேசிய பாதுகாப்பையும் இராணுவத்தின் கௌரவத்தையும் புறக்கணிப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி நாடாளுமன்றத்தில் குற்றம் சுமத்தியுள்ளார்.
டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரை முறையான வீடுகளைக் கட்டிக்கொடுக்காத அரசாங்கம், விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரின் வீட்டைப் புனரமைக்க நடவடிக்கை எடுப்பதாகக் கூறப்படுவது வெட்கக்கேடான செயல் என அவர் குறிப்பிட்டார்.
சுதந்திர தின விழாவில் கடனுக்கு வாங்கப்பட்ட ஆயுதங்களைக் காட்சிப்படுத்த முடியாது என அரசாங்கம் கூறியதை அவர் விமர்சித்தார். இராணுவத்தினர் தமது யுத்த உபகரணங்களுடன் கம்பீரமாக ஊர்வலம் வரும்போதுதான் அவர்களுக்கு உண்மையான அபிமானம் (பெருமிதம்) கிடைக்கும் என அவர் சுட்டிக்காட்டினார்.
இன்று நாம் இந்த நாற்காலிகளில் அமர்ந்திருப்பதற்கு இராணுவத்தினர் செய்த பெரும் தியாகங்களே காரணம். அவர்களது தியாகத்தைப் பற்றிப் பேசத் தைரியமில்லாத இந்த அரசாங்கம் வெட்கமடைய வேண்டும் என அவர் ஆவேசமாகத் தெரிவித்தார்.
இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்து இந்தியக் கடற்படையினர் நமது நாட்டு மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ள போதிலும், அரசாங்கம் இதுவரை அதற்கு எதிராக எந்தவிதமான இராஜதந்திர நடவடிக்கையும் எடுக்கவில்லை என அவர் கண்டனம் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு முன்னுரிமை அளிக்காமல், பிரிவினைவாத சக்திகளுக்குச் சாதகமாகச் செயல்படுவதை அரசாங்கம் உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், நாட்டின் இறையாண்மையைப் பாதுகாப்பதில் உறுதியாக இருக்க வேண்டும் என்றும் ஹெக்டர் அப்புஹாமி வலியுறுத்தினார்.