தமிழ் சினிமாவின் இளம் தலைமுறையினரின் ‘ஃபேவரிட்’ நாயகனாக உருவெடுத்துள்ள பிரதீப் ரங்கநாதன், தான் இயக்கி நடிக்கவுள்ள அடுத்த படத்தில் முன்னணி நடிகைகளுடன் இணையவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கோமாளி திரைப்படத்தின் மூலம் இயக்குநராகத் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.
தனது இயக்கத்தில் வெளியான ‘லவ் டுடே’ படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகி, இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றார். அதனைத் தொடர்ந்து ‘ட்ராகன்’ மற்றும் ‘ட்யூட்’ (Dude) எனத் தொடர் வெற்றிப் படங்களில் நடித்து வருகிறார்.
பிரதீப் ரங்கநாதன் மீண்டும் இயக்கி, கதாநாயகனாக நடிக்கவுள்ள புதிய படம் குறித்த சுவாரஸ்யமான தகவல் தற்போது கசிந்துள்ளது.
இந்தப் படத்தில் தென்னிந்தியாவின் முன்னணி நடிகைகளான ஸ்ரீலீலா (Sreeleela) மற்றும் மீனாட்சி சௌத்ரி (Meenakshi Chaudhary) ஆகிய இருவர் நடிக்கவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நடிகைகள் குறித்துப் பல்வேறு தகவல்கள் பரவி வந்தாலும், இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதீப்பின் படங்கள் எப்போதும் சமகால இளைஞர்களின் வாழ்வியலையும், காதலையும் மையமாகக் கொண்டு நகைச்சுவை கலந்து உருவாக்கப்படுவதால், இந்த நட்சத்திரக் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் மீதான எதிர்பார்ப்பு இப்போதே ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

