கும்பமேளா மோனலிசாவின் நெகிழ்ச்சி: முதல் படச் சம்பளத்தில் பெண்களுக்கான பாடசாலை! 

image ea82c3095c

மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ‘மோனலிசா போஸ்லே’ (Monalisa Bhosle), ஒரு சமூக வலைதளப் பதிவின் மூலம் உலகப் புகழ்பெற்ற நிலையில், தற்போது தனது திரையுலகப் பயணத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த முன்வந்துள்ளார். கும்பமேளாவில் ருத்ராட்ச மாலை வியாபாரம் செய்தபோது யூடியூபர் ஒருவரால் தற்செயலாகப் படம் பிடிக்கப்பட்ட இவர், தனது வசீகரமான தோற்றத்தால் “காந்தக் கண் அழகி” என இணையவாசிகளால் கொண்டாடப்பட்டார்.

இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து மும்பை திரையுலகம் இவரைச் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்றது. தற்போது ஒரு ஹிந்தி மற்றும் இரண்டு தெலுங்குப் படங்களில் நடித்து வரும் மோனலிசா, ஆரம்பத்தில் விளம்பரத் தூதராகப் பல நிறுவனங்களின் திறப்பு விழாக்களில் பங்கேற்றார். தற்போது முன்னணி நடிகையாக உருவெடுத்துள்ள அவர், தனது பழைய வாழ்க்கையை மறக்காமல் ஒரு உன்னதமான முடிவை எடுத்துள்ளார்.

சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய மோனலிசா, “திடீரெனக் கிடைத்த இந்தப் புகழுடன் எனக்குச் சமூகப் பொறுப்பும் வந்துள்ளது. கல்வி மூலமே மாற்றத்தைக் கொண்டுவர முடியும் என்பதால், எனது முதல் படச் சம்பளத்தை வைத்து எனது சொந்த ஊரில் பெண்களுக்கான பாடசாலையைக் கட்டப் போகிறேன்” என்று அறிவித்துள்ளார். வறுமையில் இருந்த தனக்கு வாழ்வளித்த சமூகத்திற்குப் பிரதிபலனாக இதைக் செய்ய விரும்புவதாக அவர் உருக்கத்துடன் தெரிவித்தார்.

திடீரெனப் பணம் மற்றும் செல்வாக்கு வந்தவுடன் ஆடம்பரத்திற்கு ஆசைப்படாமல், தனது முதல் வருமானத்தையே பெண் கல்விக்காகச் செலவிட முன்வந்துள்ள மோனலிசாவின் இச்செயல் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. சமூக வலைதளங்களில் அவருக்குப் பாராட்டுக்கள் குவிந்து வரும் நிலையில், “உண்மையான தேவதை” என ரசிகர்கள் அவரைப் போற்றி வருகின்றனர்.

 

 

Exit mobile version