2022 ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியாகித் தென்னிந்திய மொழிகளில் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘காந்தாரா’ திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக உருவான ‘காந்தாரா சாப்டர் 1’ திரைப்படம் வெளியாகி இரண்டு வாரங்களில் உலக அளவில் ரூ.717.50 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாகப் படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
ரிஷப் ஷெட்டி இயக்கி, கதாநாயகனாக நடித்த ‘காந்தாரா’ திரைப்படம், குறைந்த பட்ஜெட்டில் உருவாகி ரூ.400 கோடிக்கும் அதிகமாக வசூலை ஈட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
அதன் தொடர்ச்சியாக, ‘காந்தாரா சாப்டர் 1’ திரைப்படம் கடந்த 2-ஆம் திகதி உலகம் முழுவதும் வெளியானது. அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி, ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா, நேபாளம் உள்ளிட்ட சுமார் 30 நாடுகளில் வெளியாகி இப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
தற்போது, இரண்டு வாரங்களில் ரூ.717.50 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ள நிலையில், இந்தப் படம் விரைவில் ஆயிரம் கோடி வசூலை எட்டும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.