ஒரு வழியாக முடிகிறது துருவ நட்சத்திரம் சிக்கல்: ரசிகர்களுக்கு நம்பிக்கையளித்த கௌதம் மேனன்!

collage 1697212654

தமிழ் திரையுலகில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்றான ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் நிதிச் சிக்கல்கள் விரைவில் தீரவுள்ளதாக இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் தெரிவித்துள்ளார்.

நடிகர் சீயான் விக்ரம் நடிப்பில் கடந்த 2017-ஆம் ஆண்டு இப்படம் தொடங்கப்பட்டது. வெளிநாடுகளில் படப்பிடிப்பு, மிகப்பெரிய நட்சத்திர பட்டாளம் ஆகியவற்றால் ஏற்பட்ட அதிகப்படியான செலவு மற்றும் கடுமையான நிதி நெருக்கடி காரணமாக கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக இப்படத்தின் பணிகள் முடங்கிக் கிடந்தன.

வாரணம் ஆயிரம் படத்திற்குப் பிறகு சுமார் 7 வருடங்கள் கழித்து கௌதம் மேனன் மற்றும் ஹாரிஸ் ஜெயராஜ் கூட்டணி இப்படத்திற்காக மீண்டும் இணைந்தனர். இக்கூட்டணியின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகிப் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளன.

விக்ரமுடன் இணைந்து பார்த்திபன், சிம்ரன், ராதிகா சரத்குமார், ஐஸ்வர்யா ராஜேஷ், ரித்து வர்மா மற்றும் திவ்யதர்ஷினி (DD) எனப் பெரிய நட்சத்திரக் குழுவே இப்படத்தில் நடித்துள்ளது.

சமீபத்திய பேட்டி ஒன்றில் இப்படம் குறித்துப் பேசிய கௌதம் மேனன், “இப்படத்தின் நிதிப் பிரச்சினைகள் தற்போது முடியும் தருவாயில் உள்ளன. விரைவில் படம் குறித்த புதிய அறிவிப்புகள் மற்றும் வெளியீட்டுத் தேதி வெளியிடப்படும்” எனக் கூறி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார்.

ஸ்டைலிஷ் மேக்கிங் மற்றும் ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் விக்ரமை ‘ஜான்’ (John) எனும் கதாபாத்திரத்தில் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

 

 

Exit mobile version