தமிழ் இசை நிகழ்ச்சிகளில் கடந்த சில ஆண்டுகளாக இலங்கைத் தமிழர்கள் பெரும் பங்கு வகித்து வருவது எல்லோருக்கும் தெரிந்த விடயம். குறிப்பாக Zee தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் ‘சரிகமப’ நிகழ்ச்சியில், இலங்கையிலிருந்து வருகின்ற பல திறமையாளர்கள் பங்கேற்று தங்களின் திறமையைக் காட்டி வருகின்றார்கள்.
ஆனால் சமீபத்தில் இந்த பங்கேற்புகள் சமூக வலைத்தளங்களில் வாய்ப்புகள் யாருக்கு கிடைக்கின்றது.? என்ற சர்ச்சையை எழுப்பியுள்ளது. குறிப்பாக இலங்கைச் செய்தி நிறுவனங்கள் மற்றும் நெட்டிசன்கள் இடையே இது ஒரு திறமைக்கு எதிரான மனநிலை எனச் சுட்டிக்காட்டப்படுகின்றது.
இவ்வருடம் ‘சரிகமப’ நிகழ்ச்சியில் இலங்கை அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த சபேசன் மற்றும் பிரசாந்த் ஆகியோர் தங்களது தனித்துவமான குரல் மற்றும் தாளநயம் வாய்ந்த பரந்த இசை அறிவால், நிகழ்ச்சியை மட்டுமல்ல, பார்வையாளர்களின் மனங்களையும் வென்றிருந்தனர்.
இருவரும் நிகழ்ச்சியில் பாடிய காணொளிகள் இணையத்தில் மில்லியன் கணக்கான பார்வையாளர்களை ஈர்த்துள்ளன. குறிப்பாக YouTube, Instagram மற்றும் TikTok போன்ற சமூக ஊடகங்களில் இவர்கள் பாடிய வீடியோக்கள் வைரலாகப் பரவியுள்ளன.
அதேசமயம், சில சமூக ஊடகப் பயனாளர்கள், “இந்த நிகழ்ச்சி தமிழ்நாட்டு மக்களுக்கு மட்டும்” என வலியுறுத்தியுள்ளனர். மேலும், “இவங்களை எல்லாம் வெளியேற்றணும்”, “தமிழ்நாட்டிற்குள் உள்ளவர்களுக்கு மட்டும் வாய்ப்பு கொடுக்கணும்” என தீவிரமான கருத்துக்களையும் விமர்சனங்களையும் பதிவு செய்து வருகின்றனர்.
இது தொடர்பாக பலரும் “இந்த மேடை திறமைக்கான அங்கீகாரமாக இருக்க வேண்டும். தேசிய எல்லைகள், மாநில அடையாளங்கள் இங்கு முக்கியமல்ல” என எதிர்வினைகளைத் தெரிவித்துள்ளனர். சிலருக்கு இது ஒரு போட்டியில் உள்ள பாகுபாடாகவும் தெரிகின்றது.
முன்னதாக இலங்கைப் பாடகி கில்மிஷா, சரிகமப நிகழ்ச்சியில் பங்கேற்றபோது அவருடைய குரல் அதிக வரவேற்பைப் பெற்றிருந்தது. ஆனால் நிகழ்ச்சிக்குப் பிறகு, அவர் தமிழ்நாட்டில் அதிக வாய்ப்புகளை பெறவில்லை என்பதும் தற்போது எடுத்துக்காட்டாக பகிரப்படுகின்றது.
இதைச் சுட்டிக்காட்டி சில விமர்சகர்கள், “சபேசனைப் போல் திறமைசாலிகள் போட்டியில் இருப்பது நல்லது, ஆனால் அவர்களுக்கு பின்னர் என்ன வாய்ப்பு கிடைக்கிறது என்பதிலும் கவனம் தேவை” எனக் கூறிவருகின்றனர்.