இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில், நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள அவரது இறுதித் திரைப்படமான ‘ஜன நாயகன்’ (Jana Nayagan), வெளியாவதில் தொடர்ந்து பல்வேறு சவால்களைச் சந்தித்து வருகின்றது. அரசியல் பின்னணி கொண்ட இப்படத்திற்குத் தணிக்கைச் சான்றிதழ் (Censor Certificate) பெறுவதில் நிலவும் சிக்கல்கள் காரணமாக, ஜனவரி மாதம் திட்டமிடப்பட்ட வெளியீடு தள்ளிப்போனது. இதற்கிடையில், மார்ச் 9ஆம் திகதி நடைபெறவிருந்த மறுதணிக்கை, தணிக்கை குழு அதிகாரியின் உடல்நலக் குறைவு காரணமாக மார்ச் 17ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நீண்டகாலமாக நிலவும் இந்த வெளியீட்டு தாமதம், படத்தின் வணிக ரீதியான ஒப்பந்தங்களிலும் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தின் ஓடிடி (OTT) உரிமத்தை சுமார் 120 கோடி ரூபாவிற்கு வாங்கியிருந்த முன்னணி நிறுவனம், படம் வெளியாவதில் தொடர்ந்து தாமதம் நிலவுவதால், அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளதாகச் செய்திகள் கசிந்துள்ளன. படம் வெளியாவதில் உள்ள இழுபறி, தயாரிப்பு தரப்பிற்குப் பெரும் நிதி நெருக்கடியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள சூழலில், விஜய்யின் இந்தத் திரைப்படம் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது. எனவே, தேர்தல் ஆணையத்தின் அனுமதி மற்றும் அரசியல் சூழலைக் கருத்தில் கொண்டு, தேர்தல் முடிந்த பின்னரே (மே அல்லது ஜூன் மாதமளவில்) படம் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு திரை வட்டாரத்தில் அதிகரித்துள்ளது. இதனால் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றமடைந்துள்ளனர்.
படம் குறித்த எதிர்பார்ப்பு உச்சத்தில் இருந்தாலும், தணிக்கைக் குழுவின் பிடிவாதம் மற்றும் தேர்தல் அரசியல் சூழல் ஆகியவை படத்தின் வெளியீட்டைப் பெரும் கேள்விக்குறியாக்கியுள்ளன. தயாரிப்பு நிறுவனம் பெருமளவிலான முதலீட்டைச் செய்துள்ள நிலையில், தொடர்ச்சியான இந்தத் தடைகள் படத்தின் எதிர்காலத்தை நிச்சயமற்ற நிலைக்குத் தள்ளியுள்ளது. தணிக்கை சிக்கல்கள் தீர்க்கப்பட்டு, படக்குழு முறையான வெளியீட்டுத் தேதியை அறிவிக்கும் வரை ரசிகர்கள் பொறுமையுடன் காத்திருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

