நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி அவதூறு பரப்புவதாக கூறி நாம் தமிழர் கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டது.
சீமான் தன்னை காதலித்து திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றினார் என்றும், அவர், என்னை பயன்படுத்திக் கொண்டு கடைசியில் வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டார் என்றும் நடிகை விஜயலட்சுமி கமிஷனர் அலுவலகம் மற்றும் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
மேலும், சீமான் அரசியலில் ஒரு நிலை வரும்வரை குழந்தை வேண்டாம் என்று கூறிய நிலையில், நான் ஏழு முறை கருவுற்றேன். ஆனால், என்னை கட்டாய நிர்பந்தப்படுத்தி கருச்சிதைவு மாத்திரை கொடுத்தார் என்று குற்றம் சாட்டியிருந்தார்.
ஆனால், இதற்கு மறுப்பு தெரிவித்த சீமான் தன்னை போல 6 பேர் மீது விஜயலட்சுமி புகார் கொடுத்திருக்கிறார் என்று கூறினார்.
இந்த விவகாரத்தில், தமிழர் முன்னேற்றப்படை தலைவர் வீரலட்சுமியும் அவரது வழக்கறிஞரும் நடிகை விஜயலட்சுமிக்கு ஆதரவாக இருக்கின்றனர்.
பின்னர், இந்த புகார் குறித்து வளசரவாக்கம் பொலிசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், நடிகை விஜயலட்சுமி புகாரை வாபஸ் பெற்று பெங்களூரு சென்று விட்டார்.
இதன் பின்னர் வீடியோ ஒன்றில் பேசிய விஜயலட்சுமி, “என்னை பற்றி சீமான் அவதூறு பரப்பி வருவதால் தற்கொலை செய்ய போகிறேன். என் சாவுக்கு சீமான் தான் காரணம்” என பேசியிருந்தார்.
இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் செந்தில் குமார் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் நடிகை விஜயலட்சுமி மீது புகார் ஒன்றை அளித்துள்ளார்.