இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘கூலி’ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், வசூலைக் குவித்தது. இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்தின் 173வது திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகி, ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் (RKFI) இந்தத் திரைப்படத்தைத் தயாரிக்கிறது. இப்படத்தை இயக்குநர் சுந்தர் சி. இயக்கவுள்ளார். இந்தத் தகவலை ராஜ்கமல் ஃபிலிம்ஸ் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.
1997ஆம் ஆண்டு வெளியான ‘அருணாச்சலம்’ திரைப்படத்தைத் தொடர்ந்து, 28 ஆண்டுகளுக்குப் பிறகு கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடிக்கப் போவதாகத் தகவல் வெளியானது. பின்னர் இருவரும் இதனை உறுதிப்படுத்தினர்.
அந்தப் படத்தை நெல்சன் இயக்குவார் என்று தகவல் வெளியானது.
இப்படத்தின் கதையை எழுதுவதற்கு நெல்சனுக்கு நேரம் தேவைப்படுவதால், அதன் படப்பிடிப்புகள் 2027 இல் ஆரம்பமாகும் என கூறப்படுகிறது. இப்படத்தையும் கமல்ஹாசனே தயாரிப்பார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது சுந்தர் சி இயக்கத்தில் ரஜினி-கமல் கூட்டணியில் உருவாகும் 173வது திரைப்படத்தின் அறிவிப்பு ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தியுள்ளது.

