‘ஜனநாயகன்’ படக் கசிவு: தென்னிந்திய நடிகர் சங்கம் கடும் கண்டனம்!

world 152

நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே இணையத்தில் சட்டவிரோதமாகக் கசிந்ததற்குத் தென்னிந்திய நடிகர் சங்கம் (SIAA) தனது பலத்த கண்டனத்தை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாகச் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தச் செயல் ஒரு சாதாரண சட்ட மீறல் அல்ல, மாறாகக் காலங்காலமாக மக்களை மகிழ்விக்கும் கலைக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட ஒரு திட்டமிட்ட வன்முறை எனச் சாடியுள்ளது.

ஒரு திரைப்படம் என்பது சில மணித்துளிகள் ஓடும் கற்பனை கதையல்ல, அது பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களின் வியர்வை, உழைப்பு மற்றும் பல குடும்பங்களின் வாழ்வாதாரம் என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சுயலாபம் அல்லது காழ்ப்புணர்ச்சி காரணமாகத் திரைத்துறையைக் களங்கப்படுத்த முயல்பவர்கள், ஒட்டுமொத்தத் துறையின் மாண்புக்கே அறைகூவல் விடுத்துள்ளதாகச் சங்கம் வேதனை தெரிவித்துள்ளது.

மேலும், இந்த ஈனச் செயலில் ஈடுபட்டவர்கள் எவராக இருந்தாலும், அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு உரியத் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும், அது மற்றவர்களுக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. திரைத்துறையைச் சேர்ந்த அனைத்து அமைப்புகளும், கலைஞர்களும் ஒன்றிணைந்து இத்தகைய அச்சுறுத்தல்களுக்கு எதிராக உறுதியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் எனத் தென்னிந்திய நடிகர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான விஜய்யின் கடைசிப் படம் என்பதால் ‘ஜனநாயகன்’ மீது அதிக எதிர்பார்ப்பு நிலவி வரும் சூழலில், நடிகர் சங்கத்தின் இந்த அறிக்கை திரையுலகினர் மத்தியில் பெரும் ஆதரவைப் பெற்றுள்ளது. சைபர் க்ரைம் போலீசார் ஏற்கனவே இது தொடர்பாக 6 பேரைக் கைது செய்துள்ள நிலையில், பின்னணியில் உள்ள அனைவரையும் கண்டறியச் சங்கம் முழு ஒத்துழைப்பு வழங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version