அண்மைக் காலமாக அரசியல் மேடைகளில் பெண் திரைக்கலைஞர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு அரசியல் தலைவர்கள் கொச்சையாகப் பேசி வருவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சில வாரங்களுக்கு முன்பு பாஜக பிரமுகர் நயினார் நாகேந்திரன், நடிகர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா குறித்துப் பேசியது கடும் விவாதங்களுக்கு உள்ளானது. அதனைத் தொடர்ந்து, இன்று அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி. சண்முகம், “எனக்கு நயன்தாரா வேண்டும், முதலமைச்சர் கொடுப்பாரா?” எனப் பொது மேடையில் பேசியிருப்பது சமூக வலைதளங்களில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரசியல் லாபத்திற்காகவும், மற்றவர்களைக் கேலி செய்வதற்காகவும் பெண்களின் தனிப்பட்ட வாழ்க்கையையும் அடையாளத்தையும் இழிவுபடுத்துவது கண்டிக்கத்தக்கது எனப் பல்வேறு தரப்பினரும் குரல் கொடுத்து வருகின்றனர். குறிப்பாக, ஒரு பொறுப்பான பதவியில் இருக்கும் மக்கள் பிரதிநிதிகள் இவ்வாறு தரம் தாழ்ந்து பேசுவது, அவர்கள் பெண்களுக்கு வழங்கும் மரியாதையைக் கேள்விக்குள்ளாக்குகிறது. இத்தகைய பேச்சுக்கள் அரசியலில் ஆரோக்கியமற்ற போக்கை உருவாக்குவதாகச் சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரம் குறித்து நடிகையும் பாஜக நிர்வாகியுமான குஷ்பு தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். “பெண்கள் அல்லது நடிகைகள் உங்கள் சொத்து அல்ல; உங்கள் பேச்சுப் பொருளும் அல்ல. ஒவ்வொருவரும் தங்களுக்கு வசதியாக இருக்கும் போதெல்லாம் உரையாடல்களில் இழுத்து வரக்கூடிய ஒரு பண்டமாகப் பெண்களைக் கருத வேண்டாம்” என அவர் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார். பெண்களைக் கேலிப் பொருளாகச் சித்தரிப்பது ஒரு முதிர்ச்சியற்ற செயல் என அவர் விமர்சித்துள்ளார்.
மேலும், “மற்றவர்களைக் கேலி செய்வதற்கோ அல்லது ஒரு கருத்தை நிரூபிப்பதற்கோ ஒரு பெண்ணின் அடையாளத்தைப் பயன்படுத்துவது, பேசுபவரின் மனநிலையையும் வளர்ப்பையும் மட்டுமே அம்பலப்படுத்துகிறது” என குஷ்பு சுட்டிக்காட்டியுள்ளார். அரசியல் நாகரிகத்தைத் தாண்டிப் பெண்களின் கண்ணியத்தைக் குறைக்கும் இத்தகைய செயல்களுக்கு எதிராகத் திரைத்துறையினரும் பொதுமக்களும் தொடர்ந்து கண்டனங்களை எழுப்பி வருகின்றனர்.