நடிகர் ஜீவா நடிப்பில் அண்மையில் வெளியான ‘தலைவர் தம்பி தலைமையில்’ திரைப்படம் வணிக ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்று வரும் அதேவேளையில், நிஜ வாழ்க்கைப் பாதிப்பு ஒன்றை நகைச்சுவையாக்கியதாக நடிகர் ஜீவா கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளார்.
இப்படம் வெளியான முதல் வாரத்திலேயே உலகளவில் 11 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்துள்ளது. நீண்ட இடைவேளைக்குப் பிறகு ஜீவாவின் நடிப்பில் வெளியான ஒரு படத்திற்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளதாகத் திரையுலகினர் தெரிவிக்கின்றனர்.
படத்தின் வெற்றிக் கொண்டாட்டத்திற்காகத் திரையரங்குகளுக்குச் சென்ற ஜீவா, அங்குப் பேசிய ஒரு விஷயம் தற்போது விவாதத்தைக் கிளப்பியுள்ளது. இப்படத்தின் இறுதிக்காட்சியில், “படிச்சு படிச்சு சொன்னானே டா கண்டிஷன்ஸ் ஃபாலோ பண்ணுடா பண்ணுங்கடானு கேட்பீங்களா” என்கிற வசனம் இடம்பெற்றுள்ளது.
முன்னதாக 41 பேர் உயிரிழந்த ஒரு துயரச் சம்பவத்தின் போது, தமிழகக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் மிகுந்த வேதனையுடன் கண்கலங்கிப் பேசிய வார்த்தைகளே இவை.
இவ்வளவு பெரிய உயிரிழப்பு நடந்த ஒரு சம்பவத்தில் வெளிப்பட்ட உணர்ச்சிகரமான பேச்சை, ஒரு திரைப்படத்தில் நகைச்சுவைக்காகப் பயன்படுத்தியதோடு, அதனைக் களத்திலும் கிண்டலாகப் பேசிய ஜீவாவை நெட்டிசன்கள் திட்டித் தீர்த்து வருகின்றனர். “உயிரிழப்புகளைக் கிண்டல் செய்வது ஒரு நடிகருக்கு அழகல்ல” எனப் பலரும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
படம் வசூல் ரீதியாகப் பெரிய வெற்றி பெற்றாலும், இந்தச் சர்ச்சை ஜீவாவின் நற்பெயருக்குப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து நடிகர் ஜீவா தரப்பிலிருந்து ஏதேனும் விளக்கம் அளிக்கப்படுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

