பாலிவுட் திரையுலகம் மற்றும் அரசியல் மாற்றங்கள் குறித்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்த கருத்துக்கள் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவருக்கு ஆதரவாக அவரது மகள் கதிஜா ரஹ்மான் சமூக வலைத்தளத்தில் காட்டமான பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
சமீபத்திய பேட்டி ஒன்றில் ஏ.ஆர்.ரஹ்மான், பாலிவுட் சினிமா துறை தற்போது அதிகளவில் மதச்சார்பு உடையதாக மாறிவிட்டது. கடந்த 8 ஆண்டுகளில் ஏற்பட்ட அதிகார மாற்றங்களால், தனக்குச் சரியான வாய்ப்புகள் கிடைக்காமல் தடுக்கப்பட்டதாக அவர் குற்றம் சாட்டியிருந்தார்.
இந்தக் கருத்துக்கள் பாலிவுட் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியதோடு, பலரும் ரஹ்மானை விமர்சிக்கத் தொடங்கினர். இதற்குப் பதிலளித்த ரஹ்மான், “யாரையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கில்லை; நான் இந்தியனாக இருப்பதில் பெருமிதம் கொள்கிறேன்” எனத் தெளிவுபடுத்தினார்.
தந்தைக்கு எதிராக நிலவும் தனிப்பட்ட தாக்குதல்கள் மற்றும் விமர்சனங்கள் குறித்து கதிஜா ரஹ்மான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். “தான் உணர்ந்த ஒரு விஷயத்தைப் பேச அவருக்கு முழு உரிமை உள்ளது. உங்களுக்கு மாற்றுக் கருத்து இருக்கலாம், ஆனால் அவர் பேசவே கூடாது என மறுக்க முடியாது.”
“உலக அளவில் மதிக்கப்படும் ஒரு கலைஞரை ‘அவமானம்’ (Disgrace) எனக் கூறுவதும், அவரது நம்பிக்கையின் மீது கேள்வி எழுப்புவதும் விமர்சனம் அல்ல; அது ஒரு வகையான கதாபாத்திரப் படுகொலை (Character Assassination) மற்றும் வெறுப்புப் பேச்சு (Hate Speech).”
தமது தந்தையின் மீதான தேசப்பற்று குறித்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ஏ.ஆர்.ரஹ்மான் இந்தியக் குடியரசுத் தலைவருடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து, அதனுடன் இந்தியத் தேசியக் கொடியையும் கதிஜா பதிவிட்டுள்ளார்.

