தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும், தீவிர கார் பந்தய வீரருமான நடிகர் அஜித்குமார், மலேசியாவில் நடைபெற்ற ஏசியன் லீ மென்ஸ் சீரிஸ் (Asian Le Mans Series) தொடரில், கார் பழுதான காரணத்தினால் போட்டியைத் தொடர முடியாமல் விலகியுள்ளார்.
‘அஜித்குமார் ரேஸிங்’ (Ajith Kumar Racing) நிறுவனத்தின் சார்பில் நரேன் கார்த்திகேயனுடன் இணைந்து அஜித் குமார் மலேசியாவில் கார் பந்தயத்தில் பங்கேற்றார்.
எல்.எம்.பி 3 (LMP3) வகையிலான ரேஸ் காரை அஜித் நிறுவனம் பயன்படுத்தும் நிலையில், போட்டி தொடங்கிய மூன்றாவது நிமிடத்திலேயே காரின் ரேடியேட்டர் பழுதடைந்தது. பழுது காரணமாக அஜித்குமாரால் போட்டியைத் தொடர முடியாத சூழல் உருவானது.
போட்டியிலிருந்து விலகியமை குறித்து நடிகர் அஜித்குமார் கருத்துத் தெரிவிக்கையில், “கவலைப்பட ஒன்றுமில்லை. கார் பந்தயத்தில் இதெல்லாம் ஒரு அங்கமாக இருந்தாலும், இது மனதைத் தளரச் செய்கிறது. ஆனால், எப்போதும் இன்னொரு போட்டி இருக்கும்” என்று நம்பிக்கையுடன் கூறினார்.
அஜித் குமார் சமீபத்தில் ஸ்பெயினில் நடந்த 24 மணி நேர கார் பந்தயத்தில் 3ஆவது இடத்தைப் பிடித்திருந்தார். இதனையடுத்து, அடுத்த ஆண்டில் (2026) அபுதாபியில் நடைபெறும் கார் பந்தயப் போட்டிகளிலும் அஜித்குமார் ரேஸிங் அணி கலந்து கொள்கிறது.
அஜித் தற்போது ‘குட் பேட் அக்லி’ படத்தைத் தொடர்ந்து, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தனது 64ஆவது புதிய படத்தில் நடிக்கத் தயாராகி வருகிறார்.

