பிரபல தமிழ் மற்றும் மலையாளத் திரைப்பட நடிகை ஜனனி, தனது நீண்ட நாள் காதலரான சாய் ரோஷன் ஷாம் என்பவரை இன்று (ஏப்ரல் 02, 2026) வியாழக்கிழமை கரம் பிடித்தார். இயக்குநர் பாலாவின் ‘அவன் இவன்’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான ஜனனி, முதல் படத்திலேயே தனது எதார்த்தமான நடிப்பால் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றார். அதனைத் தொடர்ந்து ‘தெகிடி’, ‘பலூன்’, ‘ஹாட்ஸ்பாட்’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்து முன்னணி நடிகையாகத் திகழ்ந்து வருகிறார்.
நடிகை ஜனனிக்கும், சென்னையில் பிறந்து வளர்ந்து தற்போது துபாயில் விமானியாகப் பணியாற்றி வரும் சாய் ரோஷன் ஷாம் என்பவருக்கும் கடந்த ஆண்டு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இவர்களது காதல் திருமணத்திற்கு இரு வீட்டாரும் பச்சைக்கொடி காட்டிய நிலையில், இன்று மகாபலிபுரம் அருகே உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் இவர்களது திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. கடற்கரை ஓரத்தில் அமைந்திருந்த இந்தத் திருமண மண்டபத்தில் குடும்பத்தினர் முன்னிலையில் ஜனனி – சாய் ரோஷன் இணைந்தனர்.
இந்த இனிய நிகழ்வில் இரு வீட்டாரின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் திரையுலக நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். எளிமையான முறையில் நடைபெற்ற இந்தத் திருமணத்தில் ஜனனி பாரம்பரிய உடையில் தேவதை போல் காட்சியளித்தார். திருமணத்திற்குப் பிறகும் ஜனனி தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பாரா என்பது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகவில்லை. இருப்பினும், அவர் கைவசம் தற்போது சில முக்கியத் திட்டங்கள் உள்ளதாகக் கூறப்படுகிறது.
சமூக வலைத்தளங்களில் ஜனனியின் திருமணப் புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாகி வருகின்றன. இதனைப் பார்த்த திரையுலகினரும், ரசிகர்களும் “இனிய திருமண வாழ்த்துகள்”, “மகிழ்ச்சியான வாழ்க்கை அமையட்டும்” எனத் தங்களது வாழ்த்துகளைப் பொழிந்து வருகின்றனர். குறிப்பாக ‘தெகிடி’ படத்திற்குப் பிறகு அவருக்கு உருவான பெரும் ரசிகர் பட்டாளம் இந்தத் திருமணச் செய்தியைக் கொண்டாடி வருகிறது.

