நடிகரும் இயக்குநருமான பார்த்திபன், தனது தனித்துவமான பேச்சால் எப்போதும் சமூக வலைத்தளங்களில் விவாதங்களை உருவாக்குபவர். சமீபத்தில் ஒரு தனியார் நிகழ்ச்சியில் நடிகை திரிஷா குறித்து அவர் பேசிய கருத்துகள் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தன. இதற்கு திரிஷா மறைமுகமாகத் தனது எதிர்ப்பைப் பதிவு செய்ய, பார்த்திபன் அதற்கு விளக்கமளித்து வீடியோக்களை வெளியிட்டார். இந்த விவகாரம் அடங்குவதற்குள், அதே நிகழ்ச்சியில் அவர் பேசிய மற்றொரு வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளரின் கேள்விகளுக்குப் பார்த்திபன் தனது பாணியில் வித்தியாசமான பதில்களை வழங்கியுள்ளார். “பிரிக்க முடியாதது என்ன?” என்ற கேள்விக்கு “காதலும் கள்ளக்காதலும்” என்று பதிலளித்தவர், “பிரியக்கூடாதது எது?” என்ற கேள்விக்கு “நம்முடைய குழந்தைகளும், நமக்குள்ளிருக்கும் குழந்தைத்தனமும்” என்று நெகிழ்ச்சியுடன் பதிலளித்தார். மேலும், “பாட்டுக்கு யார்?” என்ற கேள்விக்கு “நான்தான்… ஏன்னா நான் பாட்டுக்கு ஏதாவது பேசிட்டுப் போயிடுவேன்” என்று நகைச்சுவையாகக் கூறி அரங்கத்தையே சிரிக்க வைத்தார்.
தொடர்ந்து, “எப்போதும் சேர்ந்தே இருப்பது எது?” என்ற கேள்விக்கு பார்த்திபன் மிகவும் உணர்ச்சிகரமாகப் பதிலளித்தார். “நமக்கு பிடித்தவர்களின் நினைவுகள்தான் எப்போதும் நம்முடன் இருக்கும். ஒரு பெண்ணைத் தொட்டு, அவருடன் வாழ்ந்துதான் காதல் இருக்க வேண்டும் என்பதில்லை. என்னுள் கூட கடந்த 30 வருடங்களாக ஒரு பெண்ணின் நினைவு இருந்துகொண்டே இருக்கிறது. நீ எங்கிருந்தாலும் உன் நினைவுகள் என்னுடன் இருக்கும்,” என்று அவர் பேசியது பலரையும் நெகிழச் செய்துள்ளது.
பார்த்திபனின் இந்தப் பேச்சு சமூக வலைத்தளங்களில் இருவேறு கருத்துகளை உருவாக்கி வருகிறது. ஒரு தரப்பினர் அவரது ஆழமான காதலையும், நேர்மையான பதில்களையும் பாராட்டி வரும் நிலையில், மற்றொரு தரப்பினர் இதனை சர்ச்சையாக்கி விவாதித்து வருகின்றனர். திரிஷா குறித்த விவகாரம் ஒருபுறம் இருக்க, பார்த்திபனின் இந்த “30 வருட காதல்” குறித்த பேச்சு தற்போது கோலிவுட் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.

