இந்தி திரையுலகில் ‘சாராபாய் vs சாராயாபாய்’ என்ற தொலைக்காட்சி தொடர் மூலம் பிரபலமானவர் வைபவி உபத்யா (வயது 30). இவர் தீபிகா படுகோனுடன் இணைந்து ‘சபக்’ என்ற திரைபடத்திலும் நடித்துள்ளார். இவர் திங்கட்கிழமை தனது வருங்கால கணவர் ஜெய் காந்தியுடன் காரில் இமாச்சலப்பிரதேசத்தில் உள்ள குலுமணாலிக்கு சென்றுள்ளார்.
வைபவி உபத்யா அப்போது பஞ்சர் என்ற பகுதியில் மலைப்பாங்கான சாலையில் திரும்பியபோது எதிர்பாராத விதமாக கார் பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் படுகாயமடைந்த நடிகை வைபவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வைபவியுடன் காரில் சென்ற அவரது வருங்கால கணவர் ஜெய் காந்தி லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வைபவியின் மறைவு செய்தி பாலிவுட் திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நடிகை வைபவி உபத்யா உடல் நாளை மும்பைக்கு கொண்டுவரப்பட்டு இறுதி சடங்கு செய்யப்படும் என்று கூறப்படுகிறது.
#cinema