தமிழ் சினிமாவின் இரு பெரும் துருவங்களான ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் மீண்டும் ஒரு படத்தில் இணையவுள்ள செய்தி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் அதிலிருந்து வெளியேறியதற்கான சுவாரஸ்யமான காரணத்தை சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார்.
கைதி 2 பட வேலைகளை ஒதுக்கி வைத்துவிட்டு, ரஜினி – கமல் படத்திற்காக லோகேஷ் ஒரு கதையைத் தயார் செய்துள்ளார். அந்த கதை இருவருக்கும் பிடித்திருந்தது.
ஆனால், ரஜினியும் கமலும் தங்களுக்கு ஒரு தீவிரமான ஆக்ஷன் கதைக்குப் பதிலாக, ‘லைட் ஹார்ட்டட்’ (எளிமையான மற்றும் நகைச்சுவை கலந்த) படம் வேண்டும் என்று கேட்டுள்ளனர்.
தனது பாணிக்கு இது செட் ஆகாது என்பதை உணர்ந்த லோகேஷ், “அந்த மாதிரி படம் என்னால் பண்ண முடியாது” என்று கூறிவிட்டு நாகரிகமாக அப்படத்திலிருந்து வெளியேறியுள்ளார்.
லோகேஷ் விலகியதைத் தொடர்ந்து, ‘தலைநகரம்’ புகழ் சுந்தர்.சி இப்படத்தை இயக்குவார் என்று கூறப்பட்டது. ஆனால் அவர் இரண்டே நாட்களில் வெளியேறிவிட்டார். தற்போது ‘டான்’ பட புகழ் இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இப்படத்தை (தலைவர் 173) இயக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார். இப்படம் வரும் ஏப்ரல் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது லோகேஷ் கனகராஜ், தெலுங்கு சூப்பர்ஸ்டார் அல்லு அர்ஜுன் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

