எனக்கு இசை தெரியாது! – பத்மபாணி விருது மேடையில் இளையராஜாவின் தன்னடக்கப் பேச்சு!

ILLAYARAJA14

மகாராஷ்டிராவில் நடைபெற்ற 11-ஆவது அஜந்தா எல்லோரா சர்வதேச திரைப்பட விழாவில், உலகப்புகழ் பெற்ற இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு உயரிய ‘பத்மபாணி’ (Padmapani) விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

எம்.ஜி.எம். பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற இந்த விழாவில், திரைப்பட விழா தலைவர் நந்த்கிஷோர் கக்லிவால், துணைவேந்தர் அன்குஷ்ராவ் கதம் மற்றும் ஆஸ்கர் விருது பெற்ற ரசூல் பூக்குட்டி ஆகியோர் இணைந்து இளையராஜாவுக்கு இந்த விருதை வழங்கினார்கள்.

விருதைப் பெற்றுக்கொண்ட இளையராஜா, தனது இசைப்பயணம் குறித்துப் பகிர்ந்துகொண்ட சுவாரசியமான கருத்துக்கள்:

எப்படி டியூன் போடுகிறீர்கள் என்று என்னிடம் கேட்கிறார்கள். எனக்கு இசை தெரியாது என்றுதான் அவர்களிடம் சொல்வேன். இசையைப் பற்றி முழுமையாகத் தெரிந்திருந்தால் நான் இந்நேரம் வீட்டில் இருந்திருப்பேன். இன்னும் கற்றுக்கொண்டிருப்பதால்தான் தொடர்ந்து வேலை செய்கிறேன்.

தனது 1,541-ஆவது படத்திற்கான பின்னணி இசையை முடித்துவிட்டு நேராக இந்த விழாவிற்கு வந்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

1968-இல் தான் ஆரம்பித்த போது இருந்த சூழலுக்கும், தற்போதைய எலக்ட்ரானிக் இசைக்கும் உள்ள மாற்றங்களைச் சுட்டிக்காட்டினார். “நான் எலக்ட்ரானிக் கருவிகளுக்கு எதிரானவன் அல்ல. ஆனால், நேரடி வாத்தியங்கள் (Live Orchestra) மூலம் கிடைக்கும் உணர்வுப்பூர்வமான இசையை மின்னணு கருவிகளால் தர முடியாது,” என்று அவர் வலியுறுத்தினார்.

82 வயதிலும் ஓய்வின்றி உழைக்கும் இளையராஜாவின் இந்தப் பேச்சைக் கேட்டு வியந்த ரசிகர்கள், “இசைஞானிக்கே இசை தெரியாது என்றால், வேறு யாருக்குத் தெரியும்? இதுவே உண்மையான தன்னடக்கம்” என அவரைப் புகழ்ந்து வருகின்றனர்.

 

 

Exit mobile version