ஆபிரிக்கக் கண்டம் ஒரு பிரம்மாண்டமான நிலவியல் மாற்றத்திற்கு உள்ளாகி வருவதாகவும், ஒரு பாரிய பிளவின் மூலம் அது இரண்டு துண்டுகளாகப் பிரிந்து வருவதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதன் விளைவாக, எதிர்காலத்தில் பூமியின் வரைபடத்தில் ஒரு புதிய சமுத்திரம் தோன்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பூமியின் மேலோடு 15 முதல் 20 வரையான டெக்டோனிக் தகடுகளால் (Tectonic Plates) ஆனது. ஆபிரிக்காவில் உள்ள கிழக்கு ஆபிரிக்க பிளவு (East African Rift – EAR) பகுதியில், ‘சோமாலிய தகடு’ (Somali Plate) மற்றும் ‘நுபிய தகடு’ (Nubian Plate) ஆகிய இரண்டும் ஒன்றையொன்று விட்டு மெதுவாக விலகிச் செல்கின்றன.
இந்தத் தகடுகள் ஆண்டுக்குச் சில மில்லிமீற்றர்கள் என்ற மிகக் குறைந்த அளவிலேயே நகர்கின்றன. எனவே, கண்டம் முழுமையாகப் பிரிந்து சமுத்திரம் உருவாக இன்னும் மில்லியன் கணக்கான ஆண்டுகள் ஆகும்.
எத்தியோப்பியாவின் அபார் பகுதியில் மூன்று தகடுகள் சந்திக்கும் இடம் மிகவும் முக்கியமானது. இங்கு நிலப்பரப்பு கடல் மட்டத்திற்குக் கீழே செல்வதால், எதிர்காலத்தில் கடல் நீர் உட்புகுந்து புதிய சமுத்திரத்தை உருவாக்கும்.
இந்தப் பிளவு செயல்முறை சுமார் 25 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிவிட்டது. இது செங்கடலில் இருந்து மொசாம்பிக் வரை சுமார் 2,174 மைல்கள் தூரம் நீண்டுள்ளது.
வர்ஜீனியா டெக் (Virginia Tech) பல்கலைக்கழக புவியியலாளர் டி. சாரா ஸ்டாம்ப்ஸ் இது குறித்துக் கூறுகையில், இந்த நிலவியல் மாற்றம் மெதுவாக நடந்தாலும், கண்டத்தகடுகள் நகர்வதால் இந்தப் பகுதிகளில் நிலநடுக்கங்கள் மற்றும் எரிமலைச் செயல்பாடுகள் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
பூமியின் உட்பகுதியிலிருந்து எழும் வெப்பக் குழம்பு (Magma), நிலத்தின் மேலோட்டை வலுவிழக்கச் செய்து அதனை உடைப்பதாலேயே ஆபிரிக்காவின் புவியியல் வரைபடம் மெல்ல மாறி வருகிறது என ஆய்வாளர்கள் விளக்கியுள்ளனர்.

