செயற்கை நுண்ணறிவின் (AI) வளர்ச்சி காரணமாக மென்பொருள் துறையில் நிலவி வரும் பாரம்பரிய வேலைவாய்ப்புச் சூழல் முற்றிலுமாக மாறப்போவதாக பிரபல முதலீட்டாளர் ரமேஷ் தமானி எச்சரித்துள்ளார். இந்திய ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலில் அவர் இந்தத் தகவலைப் பகிர்ந்துள்ளார்.
பொறியியல் மற்றும் தொழில்நுட்பப் பட்டதாரிகள் பல்கலைக்கழகப் படிப்பை முடித்தவுடன் எளிதாகப் பெற்று வந்த ஆரம்பகட்ட மென்பொருள் பணிகள் (Entry-level jobs) இனி அவர்களுக்குக் கிடைக்காது. இந்தப் பணிகளை நிறுவனங்கள் மேம்பட்ட AI அமைப்புகளிடம் ஒப்படைக்கத் தொடங்கியுள்ளன.
AI புரட்சி என்பது உண்மையானது மற்றும் மாற்ற முடியாதது எனக் குறிப்பிட்ட அவர், இந்தியத் தகவல் தொழில்நுட்ப (IT) நிறுவனங்கள் தங்களது வழக்கமான பணி முறைகளை உடனடியாக மாற்றியமைக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
வேலை இழப்புகள் குறித்த அச்சம் ஒருபுறம் இருந்தாலும், நீண்ட கால அடிப்படையில் சில நன்மைகள் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.
மென்பொருள் துறையின் அடுத்தகட்டப் பொறுப்பை உலகளாவிய திறன் மையங்கள் ஏற்கும் என்பதால், அங்கு உயர்நிலைத் திறன் கொண்டவர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்.
முற்காலத்தில் ATM நிபுணர்களோ அல்லது YouTube இன்ஃப்ளூவன்சர்களோ (Influencers) இல்லாதது போல, எதிர்காலத்தில் AI தொழில்நுட்பத்தால் நாம் இதுவரை கற்பனை செய்யாத புதிய வகை வேலைகள் உருவாகும்.
குறுகிய காலத்தில் நிச்சயமற்ற தன்மை இருந்தாலும், நீண்ட கால அடிப்படையில் வேலைவாய்ப்புச் சந்தை புதிய சூழலுக்கு ஏற்பத் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும்.
2025ஆம் ஆண்டில் மட்டும் அமெரிக்காவில் சுமார் 55,000 வேலை இழப்புகளுக்கு AI தொழில்நுட்பம் காரணமாக இருந்துள்ளதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. இது தொழில்நுட்ப உலகில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய மாற்றத்தின் அறிகுறியாகக் கருதப்படுகிறது.

