இலங்கை
யாழ்ப்பாண றோட்டறிக் கழகத்தினால்பனை உற்பத்தி சார் வாழ்வாதார உதவித்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு!
இந்தியாவின், ஓசூர் சிப்ஹொட் றோட்டறிக் கழகத்தின் “இலங்கைத் தமிழ் உறவுகளுக்கான வாழ்வாதார நிகழ்ச்சித் திட்டத்தின்” ஒரு அங்கமாக, யாழ்ப்பாண றோட்டறிக் கழகத்தினால் முன்னெடுக்கப்படவுள்ள பனை உற்பத்தி சார் வாழ்வாதார உதவித் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது.
றோட்டறி மாவட்டம் 2982 இன் முன்னாள் உதவி ஆளுநர் றொட்டேரியன் சரவணன் தலைமையில் நாவற்குழியில் அமைந்துள்ள நெய்தல் கடற்கரை நகரின் கருத்தரங்கு மண்டபத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
நாவற்குழிப் பகுதில் உள்ள கீழ் உழைப்புக் குடும்பங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட சுமார் 30 பேருக்கு இத்திட்டத்தின் கீழ் பனை சார் உற்பத்திகள் மற்றும் கைவினைப் பொருள்களின் உற்பத்தி தொடர்பில் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது. பயிற்சிக்காலத்தில் அவர்கள் ஒவ்வொருவருக்கும் வாழ்க்கைப்படியாக மாதாந்தம் 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுவதுடன் உற்பத்திப் பொருள்களுக்கான மூலதன உதவியும் வழங்கப்படவுள்ளது.
அதுமட்டுமல்லாமல் பயிற்சியின் பின்னர் பயனாளிகளால் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் முழுமையாக கொள்வனவு செய்து சந்தைப்படுத்தும் வசதியும் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.
இதற்கான நிதி அனுசரணை ஓசூர் சிப்ஹொட் றோட்டறிக் கழகத்தினால் வழங்கப்பட்டுள்ளது. இந்தச் செயற்றிட்டத்தின் முதல் அணி பயிற்சியை முடித்துக் கொண்ட பின்னர் தொடர்ந்தும் பயனாளிகளை உள்வாங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த அறிமுக நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதரகத்தின் தலைமைத் தூதரக அதிகாரியும், பிரதித் துணைத் தூதுவருமான ராம் மகேஷும் விருந்தினர்களாக கைதடியில் அமைந்துள்ள பனை ஆராய்சி நிறுவனத்தின் முகாமையாளர் பி. விஜியேந்திரன், யாழ்ப்பாணப் பல்கலைக் கழகப் பதிவாளர் வி. காண்டீபன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில், இந்தியாவின் றோட்டறி மாவட்டம் 2982 இன் உதவி ஆளுநர் றொட்டேறியன் பி. தக்ஷாயினி, ஓசூர் சிப்ஹொட் றோட்டறிக் கழகத்தின் தலைவர் றொட்டேறியன் ரி. வி. முருகன் மற்றும் செயற்றிட்ட அனுசரணையாளர்களான ஓசூர் சிப்ஹொட் றோட்டறிக் கழக உறுப்பினர்கள், அவர்களது குடும்பத்தினரும், யாழ்பாணம் றோட்டறிக் கழகத்தின் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
#srilankaNews
You must be logged in to post a comment Login