வடக்கு மாகாணத்தின் 5 மாவட்டங்களில் 3 லட்சத்து 62 ஆயிரத்து 706 ஹெக்டேயரை சுவீகரித்துள்ள வனவளத் திணைக்களம் இன்னமும் 7 ஆயிரத்து 297 ஹெக்டேயரை சுவீகரிக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இவ்வாறு சுவீகரிக்கப்பட்டால் வடக்கு மாகாணத்தின் மொத்த நிலப்பரப்பின் 42 சதவீதம் வனவளத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டுக்குள் செல்லும். மேலும், போரின் பின்னரே, 37 இடங்கள் வனவளத் திணைக்களத்தால் சுவீகரிக்கப்பட்டுள்ளது.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (ஆர்.ரி.ஐ.) ஊடாக இந்தத் தகவல்கள் திணைக்களத்தால் வழங்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாண மாவட்டத்தில் 2 ஆயிரத்து 299 ஹெக்டேயர் சுவீகரிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் 2019ஆம் ஆண்டே சுவீகரிக்கப்பட்டுள்ளன.
கிளிநொச்சி மாவட்டத்தில் 53 ஆயிரத்து 852 ஹெக்டேயர் சுவீகரிக்கப்பட்டுள்ளது. இதில் 6 இடங்கள் 2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் சுவீகரிக்கப்பட்டுள்ளன.
மன்னார் மாவட்டத்தில் 73 ஆயிரத்து 362 ஹெக்டேயர் சுவீகரிக்கப்பட்டுள்ளது. இதில் 8 இடங்கள் 2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் சுவீகரிக்கப்பட்டுள்ளன.
முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 253 ஹெக்டேயர் சுவீகரிக்கப்பட்டுள்ளது. இதில் 10 இடங்கள் 2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் சுவீகரிக்கப்பட்டுள்ளன.
வவுனியா மாவட்டத்தில் 72 ஆயிரத்து 940 ஹெக்டேயர் சுவீகரிக்கப்பட்டுள்ளது. இதில் 7 இடங்கள் 2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் சுவீகரிக்கப்பட்டுள்ளன.
வனவளத்திணைக்களம் வழங்கிய தகவலில் சுவீகரிக்கப்படவுள்ளதாக முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆயிரத்து 152 ஹெக்டேயரும், வவுனியா மாவட்டத்தில் 5 ஆயிரத்து 25 ஹெக்டேயரும், கிளிநொச்சி மாவட்டத்தில் 595 ஹெக்டேயரும், மன்னார் மாவட்டத்தில் 516 ஹெக்டேயரும் உள்ளடங்குகின்றன.
Leave a comment