இந்தோனேசியாவில் சுலாவேசி மாகாணம் பலூ நகரில் உள்ள ஆற்றில் வாழ்ந்து வரும் ஒரு முதலையின் கழுத்தில் 6 ஆண்டுகளுக்கு முன்பு இருசக்கர வாகனத்தின் டயர் சிக்கியது.
முதலை வளரும் போது டயர் கழுத்தை இறுக்கி முதலை இறக்க கூடும் என மக்கள் அச்சப்பட்டனர்.
இதனால் முதலையின் கழுத்தில் சிக்கிய டயரை அகற்ற உள்ளூர் நிர்வாகம் பல்வேறு முயற்சிகளை எடுத்தது.
ஆனால் துரதிஷ்டவசமாக அந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியிலேயே முடிந்தது. முதலையின் கழுத்தில் இருந்து டயரை அகற்றும் நபருக்கு சன்மானம் வழங்கப்படும் என கடந்த 2020-ம் ஆண்டு உள்ளூர் நிர்வாகம் அறிவித்தது.
இருப்பினும், முதலை மீதுள்ள அச்சம் காரணமாக யாரும் பெரிதாக அதில் ஆர்வம் காட்டவில்லை. முயற்சித்த ஒரு சிலருக்கும் தோல்வியே கிடைத்தது.
இந்த நிலையில் உள்ளூரை சேர்ந்த டிலி (வயது 35) என்ற விலங்குகள் நல ஆர்வலர் பிரத்யேக பொறி ஒன்றினை அமைத்து அதில் கோழியாக இரையாக வைத்து, முதலையை பிடித்தார்.
அதன் பின்னர் உள்ளூர் மக்கள் மற்றும் தீயணைப்பு வீரர்களின் உதவியோடு முதலையின் கழுத்தில் இருந்து டயரை வெட்டி எடுத்தார். அதனை தொடர்ந்து முதலை மீண்டும் ஆற்றில் விடப்பட்டது.
#WorldNews
Leave a comment