தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், முதல்முறையாகத் தேர்தல் களத்தைக் கண்ட நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 108 தொகுதிகளைக் கைப்பற்றிச் சாதனை படைத்துள்ளது. மொத்தம் 234 தொகுதிகளைக் கொண்ட தமிழகச் சட்டமன்றத்தில், தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தவெக, ஆட்சியமைப்பதற்கான உரிமை கோரியுள்ளது. இதனைத் தொடர்ந்து, வரும் மே 7-ஆம் தேதி தமிழகத்தின் புதிய முதலமைச்சராக விஜய் பதவியேற்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, தவெக 108 இடங்களைப் பிடித்துள்ள நிலையில், தி.மு.க 59 இடங்களுடன் எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெற்றுள்ளது. பெரும்பான்மைக்குத் தேவையான 118 இடங்களை விடச் சற்று குறைவாகவே இடங்கள் கிடைத்துள்ள போதிலும், மற்ற கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைக்கத் தேவையான நடவடிக்கைகளை விஜய் மேற்கொண்டு வருகிறார். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைத் தொடர்ந்து, அவரது ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தமிழகம் முழுவதும் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். விஜய்யின் இந்த வெற்றிக்குத் திரையுலகினர் மற்றும் அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், விஜய்க்குத் தனது வாழ்த்துகளைப் பகிர்ந்துள்ளார்.
“தம்பி விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் புதிய அரசுக்கு எனது வாழ்த்துகள். தமிழ்நாடு எனும் தாய்நிலத்தின் நலன் மற்றும் உயர்வுக்காகத் தொடர்ந்து களப்பணியாற்றுவோம். ஆக்கப்பூர்வமான மாற்று அரசியலை முன்னெடுக்கும் பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக நாம் தமிழர் கட்சி செயல்படும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.இந்தத் தேர்தல் முடிவுகள் தமிழக அரசியலில் பல தசாப்தங்களாக இருந்து வந்த இருமுனைப் போட்டியை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
விஜய்யின் வருகை இளைஞர்கள் மற்றும் புதிய வாக்காளர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதை இந்த முடிவுகள் உறுதிப்படுத்தியுள்ளன. புதிய அரசின் திட்டங்கள் மற்றும் விஜய் எடுக்கப் போகும் அரசியல் நகர்வுகள் குறித்து மக்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.