அமெரிக்காவுடன் எந்தவொரு இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடுவதற்கு முன்பாக, ஈரானிய உயர் அதிகாரிகள் மிகவும் “விவேகமாகச் சிந்திக்க வேண்டும்” என்று ஈரான் நாடாளுமன்றத்தின் தேசிய பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கைக் குழுவின் உறுப்பினர் இஸ்மாயில் கோவ்சாரி (Ismail Kowsari) கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரானின் ஃபார்ஸ் (Fars) செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த காலங்களில் அமைதிப் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்ட அதே காலப்பகுதியிலேயே டெஹ்ரான் மீது வொஷிங்டன் தாக்குதல்களை நடத்திய கசப்பான வரலாற்றை அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
“அமெரிக்கா பேச்சுவார்த்தைகள் குறித்துப் பொய் சொல்வது இது முதல் முறையல்ல; அவர்கள் எப்போதும் இராஜதந்திரத்தை ஒரு போர்க்கருவியாகவே பயன்படுத்தி வருகின்றனர்” என்று கோவ்சாரி ஆவேசமாகத் தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு போன்றவர்கள் இயல்பாகவே பொய்யர்கள் என்றும், ஈரானிய மக்களிடையே பிளவுகளை விதைப்பதே அவர்களின் பிரதான நோக்கம் என்றும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஈரான் இராணுவத்தில் மேஜர் ஜெனரலாகவும் பதவி வகிக்கும் இஸ்மாயில் கோவ்சாரி, தற்போதைய சூழலில் அமெரிக்காவின் பேச்சுவார்த்தை அழைப்புகளை ஒரு “நிழல் யுத்தம்” என வர்ணித்துள்ளார். “ஈரானிய அதிகாரிகள் மீது மக்களுக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தவும், உண்மையில் எந்தவொரு ஆக்கபூர்வமான முன்னேற்றமும் இல்லாத போது ஏதோ பெரிய காரியம் சாதிக்கப்பட்டது போன்ற ஒரு போலிப் பிம்பத்தை உலக அரங்கில் உருவாக்கவும் அவர்கள் முயற்சிக்கிறார்கள்,” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஈரான் மீதான தாக்குதல்கள் 25-ஆவது நாளை எட்டியுள்ள நிலையில், உள்நாட்டிற்குள் இத்தகைய கருத்து வேறுபாடுகள் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவுடன் இணக்கமான சூழல் நிலவுவதாக ட்ரம்ப் தரப்பில் கூறப்பட்டு வரும் செய்திகளை ஈரான் இராணுவத் தரப்பு முழுமையாக மறுத்துள்ளதுடன், நாட்டின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மையில் எவ்வித சமரசமும் செய்துகொள்ளப் போவதில்லை என்பதையும் கோவ்சாரி மீண்டும் ஒருமுறை வலியுறுத்தியுள்ளார்.