கடந்த வாரம் இந்தியப் பெருங்கடலில் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் நடத்திய தாக்குதலில் மூழ்கடிக்கப்பட்ட ‘ஐரிஸ் தேனா’ (IRIS Dena) ஈரானிய போர்க்கப்பலில் உயிரிழந்த மாலுமிகளின் உடல்களைத் தாய்நாட்டிற்குத் திருப்பியனுப்பும் பணிகள் விரைவில் முன்னெடுக்கப்படும் என ஈரான் இராணுவம் தெரிவித்துள்ளது. இத்தாக்குதலில் உயிரிழந்தவர்களில் 104 பேரில் இதுவரை 84 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், எஞ்சிய உடல்களை அடையாளம் காணும் நடவடிக்கைகள் மற்றும் அவற்றை ஈரானுக்கு அனுப்பும் ஏற்பாடுகளை, ஈரானின் வெளியுறவு அமைச்சின் முயற்சிகள் மற்றும் இலங்கை அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் முன்னெடுத்து வருவதாகவும் ஈரானிய இராணுவத்தின் மக்கள் தொடர்பு அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்தத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட மாலுமிகளின் உடல்களைத் திருப்பியனுப்ப வேண்டாம் என்று வொஷிங்டன் (அமெரிக்கா) இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து வருவதாக முன்னதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன. இருப்பினும், சர்வதேச மனிதாபிமானச் சட்டங்களின் அடிப்படையில், உயிரிழந்தவர்களின் உடல்களை ஈரானிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளில் இலங்கை அரசாங்கம் மனிதநேய அடிப்படையில் ஒத்துழைப்பு வழங்கி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த மார்ச் 4-ஆம் திகதி அதிகாலை இலங்கையின் காலி நகருக்கு அப்பால் சர்வதேச கடல் பகுதியில் இந்தத் தாக்குதல் இடம்பெற்றிருந்தது. இந்தத் தாக்குதலில் சுமார் 87 பேர் உயிரிழந்ததாக ஆரம்பத்தில் உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தன. இலங்கை கடற்படையால் மீட்கப்பட்ட 32 மாலுமிகள் காலி கராபிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இவர்களை மீண்டும் ஈரானுக்கு அனுப்பக்கூடாது என்று அமெரிக்கா தரப்பில் இருந்து கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ள போதிலும், சர்வதேச சட்டங்களுக்கு அமைவாகவே இலங்கை அரசாங்கம் செயற்பட்டு வருகிறது.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான போர்ச் சூழல் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்தியப் பெருங்கடல் பகுதியில் நிகழ்ந்த இந்தச் சம்பவம் சர்வதேச அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை தன்வசம் உள்ள ஈரானிய மாலுமிகள் மற்றும் உடல்கள் தொடர்பில், சர்வதேச சட்டங்களுக்கு மதிப்பளித்து நடுநிலையான மற்றும் மனிதாபிமான ரீதியிலான முடிவுகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.