ஈரான் கடுமையாக பதிலடி கொடுக்குமென தெரிவித்தமையையிட்டு, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். “தாக்குதலை மேற்கொள்ளாமல் இருப்பது ஈரானுக்கு நல்லது. தாக்குதலை மேற்கொண்டால் நாங்கள் பதிலடி கொடுப்போம். அது ஒருபோதும் பார்க்காத ஒன்றாக அமையுமென” ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரானின் முக்கிய ராணுவ இலக்குகள் மீது நடத்தி வரும் ‘Operation Epic Fury’ தாக்குதல்களுக்குப் பதிலடியாக, ஈரான் பஹ்ரைனில் உள்ள அமெரிக்க கடற்படைத் தலைமையகத்திற்கு அருகிலுள்ள குடியிருப்பு கட்டிடம் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தியது. மேலும், ஈரானின் உச்சத்தலைவர் காமேனியின் மறைவைத் தொடர்ந்து, பழிவாங்கப் போவதாக ஈரான் ராணுவம் சூளுரைத்துள்ளது. இந்தச் சூழலில் ட்ரம்பின் இந்த எச்சரிக்கை, மத்திய கிழக்கில் போர் பதற்றத்தை உச்சக்கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது.