இந்தியக் கடற்படைக்குச் சொந்தமான ‘ஐஎன்எஸ் தரங்கினி’ பாய்மரப் பயிற்சிக் கப்பல், நாளை பிப்ரவரி 27 முதல் மார்ச் 2-ஆம் தேதி வரை திருகோணமலைத் துறைமுகத்திற்கு வருகை தரவுள்ளதாகக் கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, மார்ச் 6 முதல் 9-ஆம் தேதி வரை இந்தக் கப்பல் கொழும்புத் துறைமுகத்திற்கும் விஜயம் செய்யவுள்ளது.
இலங்கை கடற்படையின் பயிற்சி அதிகாரிகளுக்குக் கடல்சார் படகோட்டம் மற்றும் துறைமுகக் கட்டமைப்பு தொடர்பான விசேட பயிற்சிகளை வழங்குவதே இந்த விஜயத்தின் முக்கிய நோக்கமாகும். திருகோணமலையிலிருந்து கொழும்பு நோக்கிய பயணத்தின் போது, இலங்கை கடற்படையைச் சேர்ந்த 3 அதிகாரிகளும் 25 பயிற்சி அதிகாரிகளும் இந்தக் கப்பலில் இணைந்து தங்களின் நேரடிப் பயிற்சிகளைப் பெற்றுக்கொள்ளவுள்ளனர்.
கமாண்டர் நிதின் கஜ்ஜரால் (Commander Nitin Gujral) தலைமையிலான இந்தக் கப்பல், விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற சர்வதேச கடற்படை மதிப்பாய்வு 2026 (International Fleet Review 2026) நிகழ்வில் பங்கேற்றுவிட்டுத் திரும்பும் வழியில் இந்த விஜயத்தை மேற்கொள்கிறது. இந்திய – இலங்கை கடற்படைகளுக்கு இடையிலான உறவை வலுப்படுத்தவும், இரு நாட்டுப் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தவும் இத்தகைய பயிற்சிகள் வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.