தலவாக்கலை பிரதான நகரில் அமைந்துள்ள பிரபல நகைக்கடை ஒன்றில், நேற்று (24) பகல் வேளையில் வாடிக்கையாளர் போல வந்த நபர் ஒருவர், உரிமையாளரைத் திசைதிருப்பிக் கோடிக்கணக்கான பெறுமதியான தங்க மோதிரத்தைத் திருடிச் சென்றுள்ளார். சுமார் 50,000 ரூபாய் பெறுமதியுடைய உண்மையான தங்க மோதிரத்தைத் திருடிக்கொண்டு, அதற்குப் பதிலாக அதே வடிவிலான போலி மோதிரம் ஒன்றை வைத்துவிட்டு அவர் தப்பிச் சென்றுள்ளமை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நகை வாங்குவதற்காக வந்தவர் போலத் தன்னை அடையாளப்படுத்திக்கொண்ட அந்த நபர், பல வகையான நகைகளைக் காண்பிக்குமாறு உரிமையாளரிடம் கேட்டுள்ளார். உரிமையாளர் நகைகளை எடுத்துக் காண்பித்துக் கொண்டிருந்தபோது, அவரது கவனத்தைச் சிதறடித்த அந்த நபர், தான் மறைத்து வைத்திருந்த போலி மோதிரத்தைக் காட்சிப் பெட்டிக்குள் (Display Box) வைத்துவிட்டு, அங்கிருந்த உண்மையான மோதிரத்தை மின்னல் வேகத்தில் மறைத்துக்கொண்டுள்ளார். பின்னர், “நகைகள் எதுவும் எனக்குப் பிடிக்கவில்லை, மற்றொரு நாள் வந்து வாங்குகிறேன்” என்று நம்பிக்கையூட்டும் வகையில் பேசிவிட்டு அங்கிருந்து நழுவியுள்ளார்.
சந்தேகநபர் சென்ற பின்னர் ஊழியர்கள் நகைகளைச் சோதித்தபோது, ஒரு மோதிரம் மாற்றப்பட்டிருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தனர். கடையிலிருந்த கண்காணிப்பு கேமரா (CCTV) பதிவுகளை ஆய்வு செய்தபோது, அந்த நபர் மிக நுணுக்கமாக மோதிரத்தை மாற்றும் காட்சிகள் தெளிவாகப் பதிவாகியிருந்தன. இது தொடர்பாகத் தலவாக்கலை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், சிசிடிவி ஆதாரங்களும் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. குறித்த நபரைப் பற்றிய தகவல்கள் கிடைத்தால் உடனடியாகத் தெரிவிக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.