முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நிதி முறைகேடு தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாக, அவரது மனைவி பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்க இன்று (20) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகவுள்ளார். இது தொடர்பான அறிவிப்பை சிஐடி அதிகாரிகள் கடந்த 18-ஆம் திகதி கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருந்த நிலையில், வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக அவர் இன்று அங்கு வருகை தரவுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உத்தியோகபூர்வ பயணங்களின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி விவகாரங்கள் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் குறித்துப் பல கட்டங்களாகப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணைகளின் தொடர்ச்சியாகவே மைத்ரி விக்ரமசிங்கவிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது. இன்றைய தினம் அவர் வழங்கும் வாக்குமூலம், இவ்வழக்கின் அடுத்தகட்ட நகர்வுகளில் மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
இதேவேளை, இவ்வழக்கில் சந்தேகநபராகக் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க நேற்று (19) நிபந்தனையுடன் கூடிய பிணையில் விடுவிக்கப்பட்டார். கொழும்பு கோட்டை நீதவான் இசுரு நெத்திகுமார, சமன் ஏக்கநாயக்கவை தலா 2 மில்லியன் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்க உத்தரவிட்டார். இருப்பினும், இந்த விசாரணை முடியும் வரை அவர் வெளிநாடு செல்வதற்கான தடைகளும், ஏனைய நீதிமன்ற நிபந்தனைகளும் அமுலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.