இலங்கைக்கான கனடிய உயர்ஸ்தானிகர் மேன்மைதங்கிய இசபெல் மார்ட்டின் (H.E. Isabelle Martin) மற்றும் பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபயரத்ன ஆகியோருக்கு இடையில் நேற்று (16) திங்கட்கிழமை அமைச்சின் வளாகத்தில் விசேட சந்திப்பொன்று நடைபெற்றது. இரு நாடுகளுக்கும் இடையிலான அரசியல், பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவதுடன், இலங்கையின் தற்போதைய அரசியல் சூழல் குறித்து இக்கலந்துரையாடலில் விரிவாக ஆராயப்பட்டது.
இலங்கையில் நீண்டகாலமாகத் தாமதடைந்துள்ள மாகாண சபைத் தேர்தலை நடத்துவது குறித்து கனடிய உயர்ஸ்தானிகர் இதன்போது விசேட அக்கறை செலுத்தினார். அதற்குப் பதிலளித்த அமைச்சர் அபயரத்ன, அரசாங்கம் தேர்தலைத் திட்டமிட்டுத் தாமதப்படுத்தவில்லை என்றும், எல்லை நிர்ணயம் மற்றும் சில தொழில்நுட்ப ரீதியான சட்டச் சிக்கல்கள் காரணமாகவே இந்தத் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் விளக்கமளித்தார். இனப் பிரச்சினைக்கான தீர்வாக மாகாண சபைகளை வலுப்படுத்துவதன் அவசியத்தை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஏற்றுக்கொண்டுள்ளதாகவும், தேர்தலை விரைந்து நடத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் உறுதியளித்தார்.
கனடாவின் “இந்து-பசிபிக் மூலோபாயத்தின்” (Indo-Pacific Strategy) கீழ் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்திற்கு இந்த ஆண்டு முதல் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் என உயர்ஸ்தானிகர் தெரிவித்தார். இந்தப் பிராந்தியத்தின் மையப்புள்ளியாக இலங்கை திகழ்வதால், இத்திட்டத்தின் மூலம் இலங்கை பல நன்மைகளைப் பெறும் வாய்ப்புள்ளது. குறிப்பாக, வடக்கு, கிழக்கு, மன்னார் மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் நிலவும் பாரிய குடிநீர் நெருக்கடிக்குத் தீர்வுகாணக் கனடா தொழில்நுட்ப உதவிகளை வழங்க முன்வந்துள்ளது. முதற்கட்ட ஆய்வுகளுக்குப் பின்னர் இதற்கான செயற்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும்.
கனடாவின் ‘Pathways to Peace’ திட்டத்தின் ஊடாக இலங்கையில் இனங்களுக்கு இடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும், மொழித் தொடர்பாடலை மேம்படுத்தவும் ஆதரவளிக்க இசபெல் மார்ட்டின் உடன்பட்டார். அத்துடன், இலங்கை மாணவர்களுக்குக் கனடாவில் முதுகலை மற்றும் ஆராய்ச்சிப் பட்டங்களுக்கான மேலதிக புலமைப்பரிசில் வாய்ப்புகளை வழங்கவும் இணக்கம் தெரிவிக்கப்பட்டது. பிராந்திய பாதுகாப்பைப் பொறுத்தவரை, இலங்கை இந்தியாவுடன் நெருக்கமான உறவைப் பேணுவதன் முக்கியத்துவம் குறித்தும் இந்தச் சந்திப்பில் ஆலோசிக்கப்பட்டது.