இலங்கையின் 78-வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஜனாதிபதியின் விசேட அதிகாரத்தின்கீழ் 49 கைதிகளுக்குப் பொது மன்னிப்பு வழங்கப்படவுள்ளதாகச் சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இலங்கை அரசியலமைப்பின் 34-வது உறுப்புரையின் ஊடாக ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய, சிறைச்சாலையில் நன்னடத்தையுடன் தண்டனை அனுபவித்து வரும் கைதிகளுக்கு இந்த மன்னிப்பு வழங்கப்படவுள்ளது.
தண்டனை அனுபவித்து வரும் கைதிகள் பூர்த்தி செய்த ஒவ்வொரு வருடத்திற்கும் ஒரு வாரம் என்ற அடிப்படையில் தண்டனை காலம் குறைக்கப்பட்டுள்ளது.
75,000 ரூபாவிற்கும் குறைவான அபராதத் தொகையைச் செலுத்தத் தவறியமைக்காகச் சிறைத் தண்டனை அனுபவிப்பவர்களின் எஞ்சிய தண்டனை காலம் முழுமையாக ரத்து செய்யப்படவுள்ளது.
இந்த விசேட பொது மன்னிப்பின் மூலம் விடுதலை பெறவுள்ள கைதிகள், சுதந்திர தினமான பெப்ரவரி 4-ஆம் திகதி அந்தந்தச் சிறைச்சாலைகளிலிருந்து விடுவிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.