முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு வோல்வர்ஹாம்டன் பல்கலைக்கழகத்திலிருந்து வந்த அழைப்பின் உண்மைத்தன்மையை ஆராய இங்கிலாந்து சென்ற குற்றப் புலனாய்வுப் பிரிவு (CID) குழு, அங்குள்ள பல்கலைக்கழக அதிகாரிகளிடம் எவ்வித வாக்குமூலத்தையும் பெறவில்லை என ரணிலின் சட்டக் குழுவினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
கொழும்பு, பிளவர் வீதியில் உள்ள ரணிலின் அலுவலகத்தில் நேற்று (29) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வழக்கறிஞர் குமார் துனசிங்க கருத்துகளை முன்வைத்தார்:
CID குழுவினர் லண்டனில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலய அதிகாரிகள் மற்றும் முன்னாள் தூதுவர் சரோஜா சிறிசேன ஆகியோரிடம் மட்டுமே வாக்குமூலம் பெற்றுள்ளனர்.சர்ச்சைக்குரிய அழைப்பை விடுத்ததாகக் கூறப்படும் வோல்வர்ஹாம்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த எவரிடமும் எவ்வித விசாரணையும் முன்னெடுக்கப்படவில்லை.
CID குழுவின் இந்தத் தவறை உறுதிப்படுத்தும் ஆதாரங்களை விரைவில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாகச் சட்டக் குழு தெரிவித்தது.
முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏகநாயக்க தலைமறைவாகிவிட்டதாகக் கூறப்படும் செய்திகளை வழக்கறிஞர் துனசிங்க நிராகரித்தார். பிணை வழங்குவதற்குத் தேவையான விதிவிலக்கான சூழல்களை நிரூபிக்கத் தவறியதாலேயே அவருக்குப் பிணை மறுக்கப்பட்டதாக அவர் தெளிவுபடுத்தினார்.
இந்த விசாரணைக்குழு ஷானி அபேசேகரவின் தலைமையில் இயங்குவதைச் சுட்டிக்காட்டிய சட்டக் குழுவினர். ஷானி அபேசேகர கடந்த தேர்தல்களின் போது தேசிய மக்கள் சக்திக்காகப் பிரச்சாரம் செய்தவர் என்றும், எனவே இந்த வழக்கு அரசியல் மயமாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
சமூக ஊடகத் தாக்கம்: ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராகச் சமூக ஊடகங்களில் பகிரப்படும் பதிவுகள் இயற்கை நீதியின் கொள்கைகளைச் சீர்குலைப்பதாக வழக்கறிஞர் தினேஷ் விதானபத்திரண கவலை தெரிவித்தார்.