நியூசிலாந்தின் வடக்குத் தீவில் பெய்து வரும் மிகக் கடுமையான மழையைத் தொடர்ந்து, மவுண்ட் மவுங்கானுய் (Mount Maunganui) சுற்றுலாத் தளத்திலுள்ள முகாம் ஒன்றில் ஏற்பட்ட பாரிய நிலச்சரிவில் சிக்கிப் பலரும் காணாமல் போயுள்ளதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மவுண்ட் மவுங்கானுய் அடிவாரத்திலுள்ள ‘பீட்சைட் ஹாலிடே பார்க்’ (Beachside Holiday Park) எனும் முகாம் பகுதியில் இன்று காலை 9:30 மணியளவில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டது.
நிலச்சரிவினால் அங்கிருந்த குளியலறைத் தொகுதி, கூடாரங்கள் மற்றும் பல வாகனங்கள் மண்ணுக்குள் புதையுண்டன. இதில் சிக்கி ஒரு சிறுமி உட்பட ஒன்பதுக்கும் குறைவானோர் காணாமல் போயுள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இதற்கிடையே, இப்பகுதிக்கு அருகிலுள்ள ‘வெல்கம் பே’ (Welcome Bay) எனும் இடத்தில் வீடொன்றின் மீது ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இருவர் உயிரிழந்துள்ளனர்.
நிலத்தின் உறுதித்தன்மை இன்னும் சீரற்ற நிலையில் இருப்பதால் மீட்புப் பணிகள் கடும் சவாலுக்குள்ளாகியுள்ளன. புதையுண்டவர்களைக் கண்டறிய மோப்ப நாய்கள் மற்றும் நவீன அகழ்வாராய்ச்சிக் கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன.
ஆரம்பத்தில் இடிபாடுகளுக்குள் இருந்து உதவி கேட்டு சில குரல்கள் கேட்டதாகவும், பின்னர் அந்த சத்தம் அடங்கிவிட்டதாகவும் மீட்புப் பணியாளர்கள் கவலையுடன் தெரிவித்தனர்.
இப்பகுதியில் கடந்த 12 மணி நேரத்தில் மட்டும் சுமார் 295 மி.மீ மழை பதிவாகியுள்ளது. இது இரண்டரை மாதங்களுக்குப் பெய்ய வேண்டிய சராசரி மழைப்பொழிவு என்பது குறிப்பிடத்தக்கது.
வடக்குத் தீவின் பல பகுதிகளுக்குத் தேசிய வானிலை சேவை ‘சிவப்பு எச்சரிக்கை’ விடுத்துள்ளதுடன், பல இடங்களில் வெள்ள அபாயமும் ஏற்பட்டுள்ளது.
பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் இந்த நிலவரத்தை உன்னிப்பாகக் கவனித்து வருவதுடன், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என உறுதி அளித்துள்ளார்.