தென்கொரியாவில் வேலைவாய்ப்புக்காகக் காத்திருக்கும் இலங்கை பணியாளர்களுக்குச் சுமையைக் குறைக்கும் வகையில், மருத்துவப் பரிசோதனை நடைமுறைகளில் முக்கிய திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.
கொரிய மனிதவள மேம்பாட்டு நிறுவனம் (HRD Korea) வழங்கியுள்ள அறிவிப்பின்படி, தகுதி பெற்று இணையத்தளத்தில் பதிவு செய்துள்ள பணியாளர்கள், முதலாம் ஆண்டின் இறுதியில் வேலை ஒப்பந்தம் கிடைக்காவிடில், இரண்டாம் ஆண்டிற்கான பதிவின் போது மீண்டும் ஒருமுறை மருத்துவப் பரிசோதனையை (Second Medical Exam) மேற்கொள்வது இதுவரை கட்டாயமாக இருந்தது.
இனிவரும் காலங்களில், இரண்டாம் ஆண்டிற்காகப் பதிவு செய்யும் போது மீண்டும் மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டிய அவசியமில்லை. முதல்முறை செய்த பரிசோதனை முடிவுகளே போதுமானதாகக் கருதப்படும்.
இந்த புதிய நடைமுறை 2026 ஜனவரி 01-ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் (SLBFE) தெரிவித்துள்ளது.
மருத்துவப் பரிசோதனைகளுக்காக வேலை தேடுபவர்கள் செலவிடும் தேவையற்ற பணத்தைச் சேமிக்க முடியும். பதிவுகளைப் புதுப்பிக்கும் போது ஏற்படும் காலதாமதத்தைத் தவிர்த்து, நிர்வாகச் செயற்பாடுகளை விரைவுபடுத்துதல்.
மொழித் தேர்ச்சி பெற்று இணையத்தளத்தில் காத்திருக்கும் பணியாளர்களுக்கு இது ஒரு நிம்மதியான செய்தியாக அமைந்துள்ளது.
இருப்பினும், தகுதியான பணியாளர்கள் இணையத்தளத்தில் முதன்முதலில் உள்வாங்கப்படுவதற்கு முன்னர் செய்யப்படும் ஆரம்ப மருத்துவப் பரிசோதனை வழமைபோலக் கட்டாயமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.