தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க) தலைவர் மற்றும் நடிகர் விஜய், கரூரில் நடந்த கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக இன்று (19) இரண்டாவது முறையாக டெல்லியில் உள்ள சி.பி.ஐ தலைமையகத்தில் விசாரணைக்காக ஆஜராகியுள்ளார்.
கடந்த 2025-ஆம் ஆண்டு செப்டம்பர் 27-ஆம் திகதி கரூரில் நடைபெற்ற த.வெ.க தேர்தல் பிரசாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து ஆரம்பத்தில் தமிழக பொலிஸார் விசாரித்த நிலையில், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி விசாரணை சி.பி.ஐ-க்கு மாற்றப்பட்டது. கடந்த ஜனவரி 12-ஆம் திகதி விஜய் முதல்முறையாக ஆஜரானார். அப்போது சுமார் 7 மணி நேரம் அவரிடம் 100-க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டன.
பொங்கல் விடுமுறைக்குப் பிறகு இன்று விசாரணைக்கு வருமாறு சி.பி.ஐ விடுத்த அழைப்பின் பேரில், விஜய் நேற்று மாலையே தனி விமானம் மூலம் டெல்லி சென்றடைந்தார். இன்று காலை லோதி வீதியில் உள்ள சி.பி.ஐ அலுவலகத்தில் அவர் முன்னிலையானார்.
கடந்த 12-ஆம் திகதி அவர் அளித்த வாக்குமூலங்களில் உள்ள முரண்பாடுகளைக் கண்டறிய இன்று குறுக்கு விசாரணைகள் (Cross-examination) நடத்தப்பட்டு வருகின்றன.
பிரசாரக் கூட்டத்திற்கு அவர் வருவதற்கு ஏற்பட்ட 7 மணி நேரத் தாமதம்.
பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் கூட்ட மேலாண்மையில் ஏற்பட்ட குறைபாடுகள்.
கூட்டத்தில் 30,000-க்கும் அதிகமானோர் கூடியது மற்றும் தடியடி நடத்தப்பட்ட சூழல்.
கட்சியின் ஒருங்கிணைப்புக் குழு மற்றும் பொலிஸாருக்கு இடையிலான தகவல் தொடர்பு உள்ளிட்டவை .
விஜய் சார்பில் முன்னிலையான த.வெ.க நிர்வாகிகள், இந்தச் சம்பவத்திற்குத் தமிழக அரசின் பொலிஸ் பாதுகாப்புப் பிரிவினரின் மெத்தனப் போக்கே காரணம் எனத் தெரிவித்துள்ளனர். எனினும், உயிரிழந்த 41 குடும்பங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையில் இந்த விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.