தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு முன்னால் காணி உரிமையாளர்கள் முன்னெடுத்து வரும் போராட்டம் இன்று யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் வருகையினால் மேலும் வலுவடைந்துள்ளது.
இன்று (சனிக்கிழமை) மதியத்திற்குப் பிறகு தையிட்டியில் சீகிரியாவிலிருந்து புதிய புத்தர் சிலையுடன் வந்த பௌத்த பிக்கு தலைமையிலான குழுவினரைக் காங்கேசன்துறை பொலிஸார் தடுத்து நிறுத்தி விசாரணை செய்தனர். அவர்களின் வாக்குமூலங்களைப் பதிவு செய்த பின்னர், தையிட்டிக்குள் நுழைய அனுமதிக்காமல் அவர்களைப் பொலிஸார் திருப்பி அனுப்பியுள்ளனர்.
காணி உரிமையாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் பெருமளவில் போராட்டத்தில் கலந்துகொண்டனர். இதனால் அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, பேருந்துகள் மூலம் மேலதிக பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
போராட்டத்தில் பங்கேற்கச் சென்ற சிவகுரு ஆதீன முதல்வர் தவத்திரு வேலன் சுவாமிகளை வழிமறித்த பொலிஸார், அவரது விபரங்களைப் பதிவு செய்து விசாரணை செய்துள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபடுபவர்களை அச்சுறுத்தும் நோக்கில், அங்கு வருகை தருவோரின் விபரங்களைப் பொலிஸார் தொடர்ச்சியாகப் பதிவு செய்து வருவதாகக் காணி உரிமையாளர்களும் சமூக ஆர்வலர்களும் குற்றம் சுமத்தியுள்ளனர்.
தையிட்டியில் புதிய சிலைகளை நிறுவவோ அல்லது கட்டுமானங்களை முன்னெடுக்கவோ விடமாட்டோம் எனப் போராட்டக்காரர்கள் உறுதியாகத் தெரிவித்துள்ளதால், அப்பகுதியில் தொடர்ந்து அமைதியற்ற சூழல் நிலவி வருகின்றது.