2025 டிசம்பர் 25 அன்று விவிலிய காலத்தைப் போன்ற ஒரு பெரும் ஜலப்பிரளயம் ஏற்பட்டு உலகம் அழியும் என்று பீதியைக் கிளப்பிய எபோ நோவா (Ebo Noah) என்ற சுயவிளம்பரத் தீர்க்கதரிசியைக் கானா நாட்டுப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
டிசம்பர் 25 முதல் அடுத்த 3 ஆண்டுகளுக்குத் தொடர் மழை பெய்து உலகம் அழியும் என்று எபோ நோவா பிரசாரம் செய்து வந்தார்.
பிரளயத்தில் இருந்து தப்பிக்கத் தான் கட்டும் ‘பேழையில்’ (Ark) ஏற வேண்டும் என்று கூறி, சுமார் 10 பெரிய மரப் பேழைகளைக் கட்டி வந்தார். அதில் இடம் பிடிப்பதற்காக நூற்றுக்கணக்கான அப்பாவி மக்கள் தங்களின் நிலம், வீடு மற்றும் நகைகளை விற்று அவரிடம் பணத்தைக் கொடுத்துள்ளனர்.
பேழைகளைக் கட்ட மக்களிடம் பெற்ற நன்கொடைப் பணத்தில், அவர் சுமார் $100,000 (ஒரு இலட்சம் டொலர்) மதிப்புள்ள மெர்சிடிஸ் (Mercedes) சொகுசு காரை வாங்கியதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
கிறிஸ்துமஸ் அன்று அவர் சொன்னபடி எந்தப் பிரளயமும் ஏற்படவில்லை. இது குறித்துக் கேட்கப்பட்டபோது, “கடவுள் எனக்கு இன்னும் கால அவகாசம் கொடுத்துள்ளார், எனவே அழிவு தள்ளிப்போடப்பட்டுள்ளது” என்று அவர் மழுப்பலாகப் பதிலளித்துள்ளார்.
பொதுமக்களிடையே தேவையற்ற அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்தியது மற்றும் பாரிய நிதி மோசடிகளில் ஈடுபட்டது ஆகிய புகார்களின் அடிப்படையில் கானா நாட்டுப் பொலிஸார் அவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.