எதிர்வரும் நத்தார் பண்டிகை மற்றும் 2026 புத்தாண்டு காலப்பகுதியை முன்னிட்டு, பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சீரான போக்குவரத்து சேவையை உறுதிப்படுத்தும் நோக்கில் நாடு தழுவிய ரீதியில் விசேட பாதுகாப்புத் திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நத்தார் தின விசேட ஆராதனைகளை முன்னிட்டு, அனைத்து கத்தோலிக்க தேவாலயங்களிலும் மதத் தலைவர்களுடன் ஒருங்கிணைந்து பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய விசேட பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
நகரப்பகுதிகள் மற்றும் நிதி நிறுவனங்கள்: பொதுமக்கள் அதிகம் கூடும் பிரதான நகரங்கள், வர்த்தக நிலையங்கள் மற்றும் நிதி நிறுவனங்களை மையப்படுத்தி விசேட ரோந்துப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
புலனாய்வு மற்றும் சிவில் உடையில் பொலிஸார்: குற்றச் செயல்களைத் தடுக்கவும், சந்தேகத்திற்கிடமான நடமாட்டங்களைக் கண்காணிக்கவும் நகரங்களைச் சுற்றி புலனாய்வு அதிகாரிகள் மற்றும் சிவில் உடையில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகம் தங்கும் ஹோட்டல்கள் மற்றும் சுற்றுலாத் தலங்களில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
சந்தேகத்திற்கிடமான நபர்கள், வாகனங்கள் அல்லது பொதிகள் குறித்து அவதானமாக இருக்குமாறும், ஏதேனும் தகவல் இருப்பின் உடனடியாக அருகில் உள்ள பொலிஸ் உத்தியோகத்தருக்கோ அல்லது பொலிஸ் நிலையத்திற்கோ அறிவிக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
பண்டிகைக் காலத்தில் பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் வசதிக்காக முன்னெடுக்கப்படும் இந்த நடவடிக்கைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறு இலங்கை பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.