OpenAI நிறுவனத்தின் ‘Sora’ போன்ற நவீன செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, மறைந்த உலகத் தலைவர்கள் மற்றும் கலைஞர்கள் வினோதமான செயல்களைச் செய்வது போன்ற தத்ரூபமான போலிக் காணொளிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சமீபகாலமாக இணையத்தில் வைரலாகி வரும் சில AI காணொளிகளில் இரண்டாம் எலிசபெத் மகாராணி மல்யுத்தம் (Wrestling) விளையாடுவது போலவும், போப் ஆண்டவர் ஸ்கேட்போர்டிங் செய்வது போலவும், மார்ட்டின் லூதர் கிங் அவமரியாதையான ஒலிகளை எழுப்புவது போலவும் காட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
இந்த ‘AI Slop’ வகை காணொளிகளுக்கு மறைந்த பிரபலங்களின் வாரிசுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மறைந்த நடிகர் ரொபின் வில்லியம்ஸின் மகள், “எனது தந்தையின் AI காணொளிகளை எனக்கு அனுப்பாதீர்கள், அது மிகுந்த மனவேதனையைத் தருகிறது” என உருக்கமாகக் கேட்டுக்கொண்டுள்ளார். இதேபோன்ற கண்டனத்தை மல்கம் எக்ஸின் பிள்ளைகளும் வெளியிட்டுள்ளனர்.
எதிர்ப்புகள் வலுத்ததைத் தொடர்ந்து, மார்ட்டின் லூதர் கிங் போன்ற சில தலைவர்களின் உருவங்களைப் பயன்படுத்த OpenAI தடை விதித்துள்ளது. மேலும், மறைந்தவர்களின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்தால் அவர்களது உருவப் பயன்பாட்டைத் தவிர்க்க நடவடிக்கை எடுப்பதாகவும் அந்த நிறுவனம் உறுதியளித்துள்ளது.
இத்தகைய போலித் தகவல்கள் அதிகரிப்பது, உண்மையான செய்திகள் மீதான நம்பிக்கையை மக்கள் இழக்க வழிவகுக்கும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். இது பிரபலங்கள் மட்டுமன்றி, சாதாரண பொதுமக்களின் உருவங்களும் மரணத்திற்குப் பின் இவ்வாறு தவறாகப் பயன்படுத்தப்படலாம் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.