ஜப்பானின் போர் விமானங்கள் மீது, எஃப்.சி.ஆர். எனப்படும் ஆயுதக் கட்டுப்பாட்டு ரேடாரை பயன்படுத்திச் சீனா அச்சுறுத்தியதாக ஜப்பான் குற்றம் சாட்டியுள்ளது. இதனால், இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் பதற்றமான சூழல் மேலும் அதிகரித்துள்ளது.
ஜப்பானின் ஓகினாவா தீவுகளுக்கு அருகே உள்ள சர்வதேச வான்வெளிப் பகுதியில் இரு வேறு சம்பவங்கள் நடந்துள்ளன.
ஜப்பானின் ‘எஃப்-15’ ரக போர் விமானங்கள் மீது, சீனாவின் லியாவோனிங் (Liaoning) என்ற விமானம் தாங்கிக் போர்க்கப்பலில் இருந்து புறப்பட்ட ‘ஜே-15’ (J-15) ரக போர் விமானங்கள் ஆயுதக் கட்டுப்பாட்டு ரேடாரை இயக்கியதாக ஜப்பான் குற்றம் சாட்டியுள்ளது.
FCR என்றால் என்ன? FCR ரேடார் என்பது, ஒரு இலக்கைக் குறிவைத்து ஏவுகணையை ஏவுவதற்குத் தயாராகும் நிலையில் மட்டுமே இலக்கை நோக்கி இயக்கப்படும் ஒரு சாதனம் ஆகும். எனவே, ரேடார் மூலம் இலக்கு வைப்பது, நேரடியான இராணுவ அச்சுறுத்தலாகக் கருதப்படுகிறது.
சீனா, அதன் அருகே உள்ள தைவான் நாட்டைத் தன் சொந்தம் கொண்டாடி வருகிறது. ஆனால், இதற்குத் தைவான் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது. இந்தப் பிரச்சினை பல ஆண்டுகளாக நீடிக்கும் நிலையில்:
இந்த விவகாரத்தில் தைவானுக்கு ஜப்பான் ஆதரவுக் கரம் நீட்டி உள்ளது. “தைவான் மீது சீனா இராணுவ நடவடிக்கை எடுத்தால், ஜப்பான் பதிலடி கொடுக்க வேண்டியிருக்கும்” என அந்நாட்டின் பிரதமர் சனாய் தகைய்ச்சி சமீபத்தில் தெரிவித்திருந்தார். இதற்குச் சீனா கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.
இச்சம்பவத்துக்கு ஜப்பான் இராணுவ அமைச்சர் ஷின்ஜிரோ கொய்ஸூமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். எனினும், இது தொடர்பாகச் சீனா இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை.