‘டித்வா’ சூறாவளியால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் அனர்த்தங்களால் நாட்டின் மூன்று பெரிய மருத்துவமனைகளும், சுமார் 100 சிறிய மருத்துவமனைகளும் பெருமளவில் சேதமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.
சிலாபம் ஆதார மருத்துவமனை (Chilaw Base Hospital), மஹியங்கனை மற்றும் வத்தேகம மருத்துவமனைகள் ஆகிய மூன்று மருத்துவமனைகள் பெருமளவில் சேதமடைந்துள்ளன. 100 சிறிய மருத்துவமனைகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
சிலாபம் மருத்துவமனையிலுள்ள சி.டி ஸ்கேன் இயந்திரம் உட்பட அனைத்து முக்கிய மருத்துவ உபகரணங்களும் பாதிக்கப்பட்டிருப்பதாக அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். இதனால், குறித்த மருத்துவமனையில் தற்போது வெளிநோயாளர் பிரிவுக்கான சிகிச்சை மற்றும் அவசர சிகிச்சை மட்டுமே மேற்கொள்ளப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தச் சேதங்கள் குறித்து உத்தேச மதிப்பீடு இன்னும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் அவர் கூறியுள்ளார். இந்தச் சூழ்நிலையில், உலக சுகாதார ஸ்தாபனம் (WHO), தேசிய சுகாதார மேம்பாட்டு நிதிக்கு 53 மில்லியன் ரூபாவை வழங்கியுள்ளது.
பேரழிவுக்குப் பின்னர் தற்காலிகப் பாதுகாப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களின் சுகாதாரத் தேவைகள் குறித்துச் சுகாதார அதிகாரிகள் தொடர்ந்து கவனம் செலுத்தி வருவதாகவும் சுகாதார அமைச்சின் செயலாளர் அனில் ஜாசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.