ரெலோ (TELO) கட்சியின் தலைவரும், வன்னி நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் கட்சியின் ஊடகச் சந்திப்பை இன்று (நவம்பர் 11) புறக்கணித்து உடனடியாக வெளியேறிச் சென்றார்.
நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தொடர்பாகச் சமூக வலைத்தளங்கள் மற்றும் இணையத்தளங்களில் வெளிவந்த குரல் பதிவு தொடர்பிலும், கட்சியின் செயற்பாடுகள் தொடர்பிலும் ரெலோ கட்சியின் தலைமைக் குழு வவுனியாவில் நேற்று (நவம்பர் 9) காலை முதல் மாலை வரை கூடி ஆராய்ந்தது.
இதனையடுத்துக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் சுரேன் குருசாமி தலைமையில் ஊடகச் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.
ஊடகச் சந்திப்புக்கு முன்னதாகவே அங்குப் பிரசன்னமாகியிருந்த ஊடகவியலாளர்கள், செல்வம் அடைக்கலநாதனைச் சந்திப்பில் கலந்து கொள்ளுமாறு பலமுறை கேட்டும், அவர் அதற்கு மறுப்புத் தெரிவித்து உடனடியாக அங்கிருந்து வெளியேறிச் சென்றார்.
ஊடகச் சந்திப்பில் தனக்கு அருகாமையில் அமரக் கட்சியின் உயர் பீட உறுப்பினர்கள் சிலரை ஊடகப் பேச்சாளர் சுரேன் குருசாமி அழைத்தபோதும், வேறு எவரும் அதில் கலந்துகொள்ளாது வெளியேறிச் சென்றிருந்தனர்.
இவ்வாறானதொரு பின்னணியில், குறித்த ஊடகச் சந்திப்பில் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் கட்சிக்கு எதிராகத் திட்டமிட்டு ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன என ஊடகப் பேச்சாளர் தெரிவித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.